சென்னை, ஆக. 15 கேரளா மாநிலம் அருவிக்குத்தியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நினைவு மண்டபக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளி வரத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பலரும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். இந்நிலையில் இந்தத் தகவல் தவறானது என்று தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கேரளத்தின் வைக்கம் அருகே அருவிக்குத்தி சிறை இருந்த இடத்தில் தந்தை பெரியார் நினைவு மண்டபக் கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என செய்தி வெளியாகியுள்ளது.
இது முற்றிலும் தவறான தகவல்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “கேரள மாநிலம் ஆறுக்குட்டிப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் கட்டட வெளிப்புறப்பணிகள் மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனினும் பணிகள் நிறுத்தப்படவில்லை. மழை நின்றவுடன் மீண்டும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்” என்று பொதுப் பணித் துறையின் விளக்கத்தைச் சுட்டிக் காட்டி அப்பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
