சென்னை, ஆக. 15- சென்னை கியூரி மருத்துவ மனை சார்பில் உறுப்பு கொடை நாள் விழிப்புணர்வு பேரணி சென்னை துரைப்பாக்கத்தில் நடைபெற்றது.
உலக உறுப்பு கொடை நாளையொட்டி, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கியூரி (சென்னை சிறுநீரகம் மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்) மருத்துவமனையின் சார்பில் ஒருவாரம் கல்லூரிகளில் மாணவர்களிடம், மருத்துவப் பயனாளிகளிடம் விழிப்புணர்வு, உறுப்பு தான உறுதிழொமி இயக்கம், கையெழுத்து இயக்கம், ஓவிய போட்டிகள், சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக, உறுப்பு கொடை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கியூரி மருத்துவமனையில் இருந்து 2.6 கிலோமீட்டர் தூரம் நடந்த பேரணியை மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சிவராமன், மூத்த சிறுநீரக வல்லுநர் மருத்துவர் முத்து ஜெயராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், மாண வர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உறுப்பு கொடையின் அவசியத்தை மக்களிடையே எடுத்துரைத்தனர்.
கியூரி மருத்துவமனையின் சிறுநீரக துறைத் தலைவர் மருத்துவர் அஜய் ரத்தூன், சிறுநீரக நிபுணர் மருத்துவர் செ.குகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருவார கால விழிப்புணர்வு நிகழ்வு என்பது, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் உறுப்பு கொடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பொதுவெளியில் நிலவும் தவறான நம்பிக்கைகளை நீக்குவது மற்றும் உறுப்பு கொடை தொடர்பான தங்கள் விருப்பத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவிப்பது, ஒருவரின் வாழ்க்கை இறுதி அத்தியாயம் பலரின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்த முடியும் என்ற மனிதநேய செய்தியை மீண்டும் வலியுறுத்துவது போன்ற முக்கிய நோக்கத்தை கொண்டுள்ளது.
