சென்னை, ஆக. 14- தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் கழிப்பறை மற்றும் தூய்மைப் பணிகளுக்கு ரூ.87 கோடி ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் கிராமப் புறங்களில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, வகுப்பறை மற்றும் பள்ளி வளாக தூய்மைப் பணிகளுக்கும், நடப்பு 2026-2027ஆம் கல்வி ஆண்டில் அப்பள்ளிகளுக்கு தேவையான தூய்மைப் பணிக்கான பொருட்கள் வாங்குவதற்கும் ரூ.86.94 கோடிக்கு ஒப்புதல் வழங்குமாறு அரசுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்று, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மேற்கண்ட பணிகளுக்காக மாநில நிதிக் குழு மானியத்தின் கீழ் ரூ.86.94 கோடிக்கு அரசு ஒப்புதல் வழங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
