மாஸ்கோ, ஆக. 13- சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும் (கிரகணம்). இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும். முழு சூரிய மறைப்பின்போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய மறைப்பின் சிறப்பம்சமாகும்.
இந்த வானியல் நிகழ்வு நேற்று (12.8.2026) நிகழ்ந்தது. இதை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டு ரசித்தனர். ரஷ்யாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சந்திரன் முதன்முதலில் சூரியனை மறைத்தது. அப்போது அதன் வெளிப்புற ஒளிவட்டத்தின் மினுமினுப்பான ஒளி மட்டுமே எஞ்சியிருந்தது.
அதன்பின் அய்ஸ்லாந்தின் தலை நகரான ரெய்க்ஜாவிக் நகரில் நிகழ்ந்த முழு சூரிய மறைப்பை வானியல் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.
அய்ரோப்பிய நாடுகளில் சூரியன் மறையும் நேரத்தில் இந்த மறைப்பு நிகழ்ந்ததால் மறைப்புடன் கூடிய சூரிய மறைவைக் காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ஸ்பெயினில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தைக் கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் சூரிய மறைப்பைக் கண்டு களித்தனர். பிரான்சு தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தை பகுதி சூரிய மறைப்பு கடந்து சென்றதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
அய்ரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், கனடாவின் பெரும் பகுதி மற்றும் வட அமெரிக்காவின் சில இடங்களில் பகுதி சூரிய மறைப்பு நிகழ்ந்தது. இந்திய நேரப்படி இரவு 11.16 மணிக்கு சூரிய மறைப்பு நடைபெற்றதால், இந்தியாவில் இருந்து இதனைக் காண முடியவில்லை.
