சென்னை, ஆக. 12- உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்து வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன், தொழிலதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், உலகப் பொருளாதார நிறுவனத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் ஆகியோர் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
உலகத் தமிழர்களின் பொருளாதார வலிமையை ஒருங்கிணைத்து, பன்னாட்டு முதலீடுகள், தொழில் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் புதிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்கும் நோக்கில் 13ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகப் பொருளாதார உச்சி மாநாடு-2026 வருகிற செப்டம்பர் 11 முதல் 13 வரை மொரீசியசில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மாநாட்டு மய்யத்தில் நடைபெற உள்ளது.
உலகின் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை மொரீசியஸ் பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலாம் தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் மொரீசியஸ் அதிபர் தரம் பீர் கோகூல் கலந்து கொள்கிறார்.
ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன், புதுச்சேரி அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
