தேனி, ஆக. 12- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 123 அடியை எட்டியுள்ள நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநர் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினர் இன்று (12.8.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்பதற்காக அனில் ஜெயின் தலைமையில் மேற்பார்வைக் குழு செயல்பட்டு வருகிறது. இதன் துணை கண்காணிப்புக் குழு, தென் மண்டல இயக்குநர் கிரிதரன் தலைமையில் இயங்கி வருகிறது.
தமிழ்நாடு பிரதிநிதிகள்: பெரியாறு-வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் செல்வம்.
கேரளப் பிரதிநிதிகள்: எர்ணாகுளம் ஒன்றிய வட்ட நீர்ப்பாசனப் பிரிவு கண்காணிப்பு பொறியாளர் கோஷி, கட்டப்பனை நீர்ப்பாசன துணைப் பிரிவு உதவி நிர்வாகப் பொறியாளர் லெவின்ஸ் பாபு. கடந்த மே 15-ஆம் தேதி இக்குழுவினர் பிரதான அணை, பேபி அணை, மண் அணை, நீர்வரத்து, கசிவு நீர் அளவு, மதகுகளின் இயக்கம் மற்றும் கேலரி பகுதிகளை நேரில் ஆய்வு செய்திருந்தனர்.
தற்போது அணையின் நீர்மட்டம் 123 அடியை எட்டியுள்ளதால், இன்று மீண்டும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு, மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், பேபி அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தொடங்குவது மற்றும் வல்லக்கடவு முதல் பெரியாறு அணை வரையிலான பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
