சென்னை, ஆக.11- சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில், ஒன்றிய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி ‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது. பிணையம் அல்லது சொத்து அடமானம் ஏதுமின்றி இத்திட்டத்தில் எளிய முறையில் கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2015 முதல் நடப்பாண்டு ஜூன் வரையிலான நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பீகாரில் 4.78 கோடி பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 863 கோடியே 3 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் அந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 4.33 கோடி பெண் தொழில் முனைவோர்கள் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 537 கோடியே 79 லட்சம் கடன் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் 3-ஆம் இடத்திலும், கர்நாடகம் 4-ஆம் இடத்திலும் உள்ளன. முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தென் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு, கருநாடகா, கேரளா ஆகியவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
