தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்
சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை, ஆக.10- தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
தமிழ்நாட்டில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று (10.8.2026) தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இத்தீர்மானத்தை கொண்டுவந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபுத்தன்மை, அரசாணைகளின் வாயிலாக பின்பற்றப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. அனைத்துக்கட்சிகளின் ஆதரவைத் தொடர்ந்து முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு
சென்னை, ஆக. 10- நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கதொகையை அதிகரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (10.8.2026) முதலமைச்சர் ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது: விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளை பயிரிடவும், அறுவடை செய்திடவும், விற்பனை செய்திடவும் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றனர்.
தற்சமயம் தமிழ்நாட்டின் நிதிநிலைமை சரியில்லாமல் இருந்தாலும், நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என கருதி தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவில் மாநில அரசின் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்க இருப்பதால், குறைந்தபட்ச ஆதார விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையை சன்ன ரக நெல்லுக்கு 289 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 159 ரூபாய் உயர்த்தி குவிண்டாலுக்கு சன்னரகத்துக்கு ரூ.2750, பொது ரகத்துக்கு ரூ.2600 வழங்கப்படும். மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஓராண்டில் ரூ.156க்கு அதிகமாக உயர்த்தி வழங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,290.50 நிர்ணயம் செய்துள்ளது. கூடுதலாக தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 709.50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும். வரலாற்றில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.134க்கும் அதிகமாக சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
