ராஞ்சி, ஆக. 8- ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிவு முறைகேடு குறித்து சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மாநில மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 13ஆவது நாளை எட்டியுள்ளது.
ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததை அடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.
ஜூலை 25ஆம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (ஜேஎல்கேஎம்) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ ஆகஸ்ட் 2 முதல் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, போராட் டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு மாணவிகள் உட்பட அய்ந்து மாணவர்கள் கடந்த 4.8.2026 முதல் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், ‘ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த ஜேபிஎஸ்சி 14ஆவது ஒருங்கிணைந்த முதன்மைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சிபிஅய், அமலாக்கத் துறை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகள் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஓஎம்ஆர் விடைத்தாளில் 5ஆவதாக விடையளிக்கவில்லை “not attempted” என்றொரு வாய்ப்பை அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர் உண்ணாநிலை காரணமாக தேவேந்திர நாத் மஹ்தோவின் குருதி சர்க்கரை மற்றும் குருதி அழுத்த அளவுகள் கணிசமாக குறைந்ததை அடுத்து அவரை தொடர்பு கொண்டு பேசிய லடாக்கைச் சேர்ந்த சோனம் வாங்சுக் (இவர் டில்லியில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது உண்ணாநிலை இருந்த சமூக செயற்பாட்டாளர்), குறைந்தபட்சம் தண்ணீரையாவது குடிக்குமாறு வலியுறுத்தினார். இதை மஹ்தோ ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்தா லோசிக்கவும், உறுதியான தீர்வுகளை பரிந்துரைக்கவும் அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமைத்துள்ளார்.
மாணவர் தலைவர் ராதே குமார் கூறுகையில், “வரும் 10ஆம் தேதி சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அரசு அதிகாரிகள் அண்மையில் எங்களைச் சந்தித்துப் பேசினர். நாங்கள் அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளை தெரிவித் தோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், திட்ட மிட்டபடி வரும் 10ஆம் தேதி சட்டப்பேரவையை முற்றுகை யிடுவோம்” எனத் தெரிவித்தார்.
