சென்னை, ஆக. 3- மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கருநாடக அரசை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்தச் சென்ற தமிழ்நாடு விவசாயிகளை கைது செய்திருப்பதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக உள்ள காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு கருநாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை.
இதன் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காவிரி நீர் ஆதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கருநாடக அரசை கண்டித்து தமிழ்நாட்டில் பல விவசாய சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அய்க்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சங்கரய்யா தலைமையில் டில்லியில் போராட்டம் நடத்துவதற்காக சென்னையில் இருந்து டில்லிக்கு சென்றவர்களை நாக்பூரில் ரயிலிருந்து கீழே இறக்கி கைது செய்துள்ளனர்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக ரீதியாக போராடும் உரிமையை பறிக்கும் வகையில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவித்து அவர்கள் டில்லி செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
