சென்னை, ஆக. 3- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு நாளை இணைய வழியில் தொடங்குகிறது.
மாநில கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணைய வழியில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2025 – 2026ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று https://mcc.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் 4ஆம் தேதி (நாளை) தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 22ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். மாணவர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகளை 23ஆம் தேதிக்குள் கல்லூரி நிர்வாகம் முடிக்க வேண்டும்.
இதையடுத்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆக. 24ஆம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு செப். 10ஆம் தேதியும், இறுதி சுற்று கலந்தாய்வு செப். 27ஆம் தேதியும் தொடங்கி நடைபெறுகிறது.
அதேபோல், தமிழ்நாட்டில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.
நடப்பாண்டு முதல் சுற்று கலந்தாய்வு https: //tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் வரும் 13ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2ஆம் சுற்று கலந்தாய்வு வரும் 31ஆம் தேதியும், 3ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 16ஆம் தேதியும், இறுதி சுற்று கலந்தாய்வு அக்டோபர் 3ஆம் தேதியும் தொடங்கி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் மட்டும்
நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிப்பு
சென்னை, ஆக. 3- தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே நாய்களுக்கு ஓரளவு தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களில் நாய்களுக்கு எவ்வித தடுப்பூசியும் போடாததால், நகரப் பகுதியைவிட, கிராமப்புறங்களில் நாய்க்கடி பாதிப்பு அதிகம் உள்ளது.
அதன்படி, நடப்பு ஆண்டில் சேலத்தில் 28,166 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில், 22,113 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 9,229 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலியில் 23,095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 4.68 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் நாய்க்கடி பாதிப்பால் 6.26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 34 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். கடந்த ஆண்டைவிட நாய்க்கடி பாதிப்பு குறைந்துள்ளது” என்றனர்.
