மதுரை, ஆகஸ்ட் 1 காரைக்குடியில் ரூ.100 கோடி கோயில் நில மோசடி வழக்கில், தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) வழங்கிய தடையின்மைச் சான்று கடும் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், கோயில் நிலங்களுக்கு இனி தாசில்தார்கள் தடையின்மை சான்று வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, முடியரசன் சாலையில் உள்ள 2 ஏக்கருக்கும் மேற்பட்ட (தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடி) நிலம் தொடர்பான மோசடி இந்த வழக்கில் உள்ளது. 1975-இல் போலி ஆவணம் மூலம் நீதிமன்ற உத்தரவு பெற்று, பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பட்டா மாறுதல் செய்ய மனு அளிக்கப்பட்டது. இதற்காக, கோயில் நிலங்களுக்கான சிறப்பு தாசில்தார் மகாதேவன் தடையின்மை சான்று வழங்கியிருந்தார் . இந்த விவகாரத்தில் நீதிபதி எஸ்.சிறீமதி, “கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியர் மகாதேவனின் செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. வேலியே பயிரை மேய்வது போல, கோயில் சொத்துகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியே தடையின்மை சான்று வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
தடையின்மை சான்று மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டு, கிராம வருவாய் கணக்கில் மீண்டும் கோயில் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இதைப் போன்று வேறு ஏதேனும் கோயில் நிலங்களுக்கு வழங்கப்பட்ட தடையின்மை சான்றுகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன .
அறநிலையத்துறை ஆணையர், இனிமேல் இத்தகைய தவறுகள் நடக்காத வகையில், கோயில் நிலங்களுக்கு என நியமிக்கப்பட்ட தனி தாசில்தார்கள் தடையின்மை சான்று வழங்கக் கூடாது என உரிய சுற்றறிக்கைகள் பிறப்பிக்க வேண்டும் .
இந்த உத்தரவின் மூலம், கோயில் நிலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளே அதை மோசடிக்கு உட்படுத்தும் நிலை மாற்றப்பட்டு, வருங் காலத்தில் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க நீதிமன்றம் முக்கியமான நட வடிக்கையை எடுத்துள்ளது.
