டில்லி, ஜூலை 26- கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பிய பரிந்துரையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் இத்திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தயாரித்து, ஒப்புதலுக்காக ஒன்றிய அரசிற்கு மீண்டும் அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த இரண்டு நகரங்களின் மெட்ரோ திட்டங்களையும் ஒன்றிய அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
மக்கள் தொகை
கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் தற்போதைய மக்கள் தொகை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அளவுகோல்களை எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், மக்களின் பயண நேரத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது அல்லது பயண நேரம் பெரிதாகக் குறையாது என்று ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இத்திட்டங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வந்த நிலையில், ஒன்றிய அரசின் இந்த மீண்டும் எடுக்கப்பட்டுள்ள நிராகரிப்பு முடிவு தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
