புதுடில்லி, ஜூலை 24 திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்துகளை பழனி கோயில் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. ஆனால், மேற்கண்ட 1.35 ஏக்கர் நிலத்துக்கு சேதுபதி, வெள்ளத்துரை தாங்கள்தான் உரிமையாளர்கள் என்றும், அந்த நிலத்தை பழனி சார்பதிவாளர் கிரையம் செய்ய மறுக்கிறார் எனவும் கூறி அவர்கள் இருவரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், மேற்கண்ட சொத்து தொடர்பாக நடந்த சிவில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், வேறு எந்த பிரச்சினையும் அந்த சொத்தில் இல்லை எனவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்த சொத்தை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரின் நடவடிக்கை தன்னிச்சையானது என மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கும் கருத்து ஏற்கப்படுகிறது. சார்பதிவாளரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தீர்ப்பளித்தார்.
செல்லாது
இதையடுத்து சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் அந்த 1.35 ஏக்கர் நிலத்தை சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோர் சேர்ந்து வேறு நபர்களுக்கு கடந்த 6-ஆம் தேதி கிரையம் செய்து உள்ளனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும். அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மதுரை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, மத நிறுவனங்களின் சொத்துகளை பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பதிவுத்துறை சார்பில் கேட்டு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தனிநீதிபதியிடம் உண்மைகளை மறைத்து உத்தரவுகள் பெறப்பட்டு இருப்பதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து மேற்கண்ட மடத்தின் சொத்தை பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று உத்தரவிட்டது. இதனிடையே, இந்நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த, சி.பி.சி.அய்.டி. காவல்துறையினருக்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டதை தொடர்ந்து, சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் இந்த நில முறைகேடு வழக்கு தொடர்பான புலன்விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சேதுபதி, வெள்ளத்துரை சார்பில் வழக்குரைஞர் ஷ்யாம் கோபால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களையும் ஆராயாமல் பிறப்பித்துள்ள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார். இதனிடையே, இந்த மேல்முறையீடு மனுவை விசா ரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தை கேட்கக் கோரி பழனி முருகன் கோயில் சார்பில் தமிழ் நாடு அரசின் வழக்குரைஞர் பி.கருணாகரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
