கேள்வி 1: தற்கால த.வெ.க. அரசின் நிலைப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல்…. அதிகாரிகள் பதவி விலகுவதும், பதவி விலகத் தூண்டப்படுவதும் நியாயமா? அதிகாரம் பெரிதா? 5 ஆண்டு அரிதாரம் பெரிதா? சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகம் வேண்டும்?
– சுரேஷ் சுந்தரபாண்டியன்
பதில் 1: வாக்களித்த மக்களுக்குத்தான் சமூகப் பொறுப்பு அதிகம் வேண்டும் என்பதை இத்தகைய அரசியல் (அலங்)கோலங்கள் காட்டுகின்றன! இல்லையா?
- • •
கேள்வி 2: கட்சிக் கூட்டத்திற்கு வந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுத் துறைகளில் வேலை வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகாதா? இதுகுறித்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு ‘வழவழ.. கொழகொழ’ என இருப்பது சரியா?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 2: இன்றைய நீதிபரிபாலனமே தலை முதல் கால்வரை ‘வழவழா, கொழ கொழா’வாகத்தானே இருக்கிறது! அதிகம் வெண்டைக்காய், விளக்கெண்ணெய், சேனைக்கிழங்குப் பதார்த்தங்கள் உவமையால் பாதிக்கப்படுகின்றன!
- • •
கேள்வி 3: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் வெளியானதில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணா நிலையால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை அறிந்தாவது ஒன்றிய அரசு கண்களைத் திறக்குமா?
– க.வெற்றிச்செல்வன், அயன்புரம்
பதில் 3: உ.பி. அகிலேஷ் யாதவ் முதலிய பலரது வேண்டுகோளுக்கிணங்க அவர் உண்ணாநிலையை முடித்துக்கொண்டார். இரக்கமில்லாதவர்கள் கண்கள் எப்போதும் திறக்காது! இறுதியில் மக்கள் திறக்க வைப்பார்கள்.

- • •
கேள்வி 4: சாத்தான்குளம் காவல் நிலைய கொடூரத்தை ஞாபகப்படுத்துவது போன்று நாகர்கோயிலில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன் காவலர்களின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்துள்ளாரே – இவை போன்றவற்றை தவிர்ப்பதற்கு காவல்துறை உயரதிகாரிகள் உரிய வரைமுறைகள் வகுத்தால் என்ன?
– கி.பச்சைமுத்து, கும்மிடிப்பூண்டி
பதில் 4: நியாயமான கேள்வி; ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால், காட்சிகள் (கொடுமை), நடத்தைகள் மாறவில்லையே என்று கூடி அழுவதுதான் ஒரே தீர்வு போலும்.
- • •
கேள்வி 5: ஓடும் ரயிலில் ஹோமம் வளர்த்துப் பூஜை நடத்தியுள்ள அலட்சியத்திற்கு – “இலட்சக்கணக்கில் பணம் செலுத்திப் பதிவு செய்த தனிப்பட்ட சொகுசுப் பெட்டியில்தான் இந்தப் பூஜை நடத்தப்பட்டுள்ளது” என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது ஏற்புடைய தாகுமா?
– கி.வெண்மதி, மயிலாடுதுறை

பதில் 5: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் ஹிந்துத்துவாவின் கொடும் தீய விளைவு. நீதிபதிகள் தாமே முன்வந்து இதுபோன்ற மக்கள் உயிருடன் விளையாடும் கொடிய பக்திப் போதைகளை – நீதிமன்றச் சாட்டையால் அடித்துத் திருத்த முன்வர வேண்டும்.
- • •
கேள்வி 6: கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குப் பாலியல் சீண்டல், அதற்காகப் பணிநீக்கம் – கைது நடவடிக்கை – பல ஆண்டு சிறைத் தண்டனை என நீதிமன்ற தீர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் நாடு முழுவதும் பல புகார்கள் இதுபோன்று வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 6: மக்களை ‘புத்தி கொள்முதல்’ செய்வதற்கு ஊடகங்கள், சினிமா போதைகள் உள்பட பல போதைகளை ஒழிக்க ஒரு பெருந்திரள்தான் ஒரே வழி! என்ன சித்து? அடுத்தவர்களைக் கேள்வி கேட்க விடவே மாட்டீர்களா?
- • •
கேள்வி 7: “தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள், படித்தவர்கள், அனைத்தையும் அறிந்தவர்கள்” என்று ஒரு வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பாராட்டியுள்ளாரே – சரியா?
– இரா.பூங்குழலி, செம்மஞ்சேரி
பதில் 7: நல்ல கேள்வி – மில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் அறிந்தவர்கள்தான் என்றாலும் சிற்சில நேரங்களில் ‘கோட்டை’ விடுபவர்கள் என்பதைப் பல நடப்புகள் காட்டுகின்றவே!
- • •
கேள்வி 8: எழுத்தாளர் நலங்கிள்ளியின் சுயசரிதையான ‘ஆர்.எஸ்.எஸ். பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்’ நூலுக்கு வெளிவரும் முன்பாகவே சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?
– கோ.சேரலாதன், மணலி புதுநகர்
பதில் 8: புத்தகம் வெளிவருவதற்கு முன்பே அதற்கு நல்ல விளம்பரம் செய்துள்ளவர்களுக்கு நண்பர் நலங்கிள்ளி சார்பில் நாம் நன்றி சொல்வோமா!
- • •
கேள்வி 9: உளவியல் பாதிப்புகளை உண்டாக்கும் காட்சிப் பதிவுகள் பொதுவெளியில் தாராளமாகப் பகிரப்படுகின்றனவே – முற்றாகத் தடுக்கப்படுவதற்கு ஒன்றிய – மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லையே – ஏன்?
– வி.நெடுஞ்செழியன், திருவாரூர்
பதில் 9: விழிப்புணர்வைப் பரப்புரைகள் மூலம் உண்டாக்கிட உரிய அலட்சியக்காரர்களின் மனச்சாட்சியை உலக்கை கொண்டாவது தட்டி எழுப்பத் திரள வேண்டும்!
- • •
கேள்வி 10: சாலை விபத்துகளைக் குறைக்க தனி செயல் திட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முனைந்துள்ளது பற்றி….?
– மா.வெற்றிவேலன், மதுரை
பதில் 10: நல்ல செய்தி, சில மேதைகள் முன்பு சொன்ன ஆலோசனைகளைப் போல் இல்லாமல் அத் திட்டம் இருந்தால் பயனாகும்!
‘உணவுப் பஞ்சம் தீர, உண்ணுமளவைத் தவிருங்கள்’ என்ற (அரிய) யோசனை போல் இல்லாமல் இருந்தால் நல்லது!
- • •
‘விடுதலை’ ஞாயிறு மலருக்கு
கேள்விகள் வரவேற்கப்படுகின்றன!
அனுப்ப வேண்டிய முகவரி:
‘விடுதலை’, 84/1(50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
மின்னஞ்சல்: [email protected]
