ஒரு ஜாதகம் – ஒரு உயிரைக் கொலை செய்வதற்குக் காரணமாக இருந்தது என்பதை எண்ணும்போது, குருதி கொதிக்கிறது.
அதுவும், பெற்ற மகனையே ஆள் வைத்துக் கொலை செய்யும் அளவுக்குப் புரையோடிக் கிடக்கும் தன்மையை என்ன சொல்லுவது?
‘தினத்தந்தி’யில் வெளிவந்த ஒரு செய்தி:
தேனியில், மூன்றாண்டுக்குப் பிறகு இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தேனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் வேந்தர்பாலா (வயது 50). இவருடைய மூத்த மகன் சிறீகாந்த் (வயது 20).
20 வயதான சிறீகாந்த், தன் தந்தையிடம் சொத்துக் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறான்.
இந்த நிலையில், சிறீகாந்தின் தந்தை வேந்தர்பாலா, ஜோதிடர் ஒருவரிடம் ஜாதகம் பார்த்துள்ளார். தன் மகனால், வேந்தர் பாலாவுக்கு ஆபத்து இருப்பதாக ஜோதிடர் கூறியிருக்கிறார்.
தன் மகனால் தனக்கு ஆபத்து என்று நம்பிய தந்தை, தன் மகனைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
சிறீகாந்திடம் முன் விரோதம் உள்ள அலெக்ஸ் பாண்டியன், தந்தை வேந்தர் பாலா, வேந்தர் பாலாவின் நண்பர் கருப்பையா ஆகியோர் முல்லை பெரியாற்றுப் படுகைக்கு சிறீகாந்தை அழைத்துச் சென்று, கூட்டாக மது அருந்தினர்.
திடீரென சிறீகாந்தின் கழுத்தைத் துண்டால் நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
அதோடு விடவில்லை. உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஆற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.
மூன்றாண்டுகளாகியும் மகனைக் காணவில்லை என்ற தவிப்பில், தாய் ராஜலட்சுமி, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
காவல்துறையின் தீவிர விசாரணையில், சிறீகாந்த் கொலைக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.
என்ன விபரீதம்!
ஜாதகத்தை நம்பி, தன் மகன் என்றும் பாராமல், கூட்டுச் சேர்ந்து கொலை செய்யும் அளவுக்குப் புத்தி கெட்டுப் போனது; கொலை வெறியைத் தூண்டியதற்குக் காரணம், ஜாதகத்தை நம்பிய முற்றிப்போன மூடநம்பிக்கைதானே!
கொலையாளிகள் இப்பொழுது சிக்கிக் கொண்டனரே – அந்த ஜாதகம் என்ன ஆனது?
நியாயமாக அந்த ஜோதிடனையும் கைது செய்து, உரிய தண்டனையை வழங்கவேண்டாமா?
ஜோதிடரை ஆஸ்தான ஆலோசகராக வைத்திருப்பவர்களும் சிந்திக்கவேண்டும்!
– மயிலாடன்
