சென்னை, ஜூலை 16– உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாகவும், சிறப்பு பிரிவினாராகவும் கருதி, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்காமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்குடன், மூன்றாம் பாலினத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கருநாடகாவில் சிவில் சர்வீசஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஒரு சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதே நடைமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என்று மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிவில் சர்வீஸ் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா என்பது குறித்து ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
கடும் வெயில் எதிரொலி
நாகை மாவட்டத்தில் உப்பு உற்பத்தி தீவிரம்!
நாகை, ஜூலை 16- நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 6 லட்சம் டன் என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள உப்பளங்களில், தற்போது நிலவும் அதிகப்படியான வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக உப்பு பாத்திகளில் நீர் ஆவியாகி உப்பு படிகங்கள் வேகமாக உருவாகி வருகின்றன. இதனால் உப்பு உற்பத்திப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் சீராகவும் கடுமையாகவும் இருப்பதால், உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்த அதிகரித்த உற்பத்தி, உள்ளூர் தேவை போக அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட உள்ளது.
