கடலூர், ஜூலை 6 ‘‘செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் – எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’’ கடலூரில் ஆகஸ்ட் 29 திறந்தவெளி மாநாட்டினை சிறப்பாக நடத்துவது எனவும், பொதுத்துறை பங்குகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து ஜுலை 7 இல் கண்டன ஆர்ப்பாட்டத்தினை பெருந்திரள் நிகழ்வாக நடத்துவது என்றும் கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 1.7.2026 அன்று மாலை ஆறு மணி முதல் எட்டு முப்பது மணி வரை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழகக் காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்டத் தலைவர் சொ. தண்டபாணி, மாவட்டச் செயலாளர் எழில் ஏந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார். வடக்குத்து கிளைக் கழகத் தலைவர் தங்க.பாஸ்கர், மறுவாய் கழகத் தலைவர் திருநாவுக்கரசு, அப்பியம்பேட்டை திராவிடர் கழகப் பொறுப்பாளர் வேலு, நெய்வேலி நகரத் தலைவர் இசக்கிமுத்து, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன், அமைப்பாளர் முருகன், மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்
தமிழர் தலைவர் கழகத் தலைவரின் ஆணைக்கு இணங்க வரும் ஜூலை 7 ஆம் நாள் காலை 10 மணிக்கு நெய்வேலி நகரம் முக்கிய கடைவீதி காமராஜர் சிலை அருகில் பொதுத்துறை பங்குகளைத் தனியார் துறைக்கு விற்கும் என்.எல்.சி. நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தை மக்கள் பெருந்திரள் நிகழ்வாக சிறப்புற நடத்துவது என்றும்,
கடலூரில் ஆகஸ்ட் 29 அன்று ‘செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்’ – எதிர்நீச்சலில் வென்ற பெரியார் திறந்தவெளி மாநாடு கடலூரில் சிறப்பாக நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு வாய்ப்புகளை வழங்கிய கழகத் தலைவர் தமிழர் தலைவருக்கு நன்றி பாராட்டுவது என்றும் தீர்மானமாக வடிக்கப்பட்டது.
நிறைவாக நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
