புதுடில்லி, ஜூலை 4- பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த டில்லி – டேராடூன் எக்ஸ்பிரஸ்வே திறக் கப்பட்ட சில நாட்களிலேயே பள்ளங்கள் விழுந்து மோசமான நிலையை எட்டியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயண நேரத்தைக் குறைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரம்மாண்ட விரைவுச்சாலை, முதல் மழையிலேயே சேதமடைந்துள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.
டில்லி – டேராடூன் எக்ஸ்பிரஸ்வே
டில்லி, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் ரூ.12,000 கோடி மாபெரும் பட்ஜெட்டில், 213 கிலோமீட்டர் நீளத்திற்கு 6 வழிச்சாலையாக இந்த எக்ஸ்பிரஸ்வே உருவாக்கப்பட்டது. இதில் டில்லி நகருக்குள் மட்டும் 14.75 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும். இதில் 5 சுங்கச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன.
பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்ட இந்தச் சாலையை கடந்த ஏப்ரல் 14, 2026 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால், இந்தச் சாலை திறக்கப்பட்டு வெறும் 79 நாட்களிலேயே முதல் பருவமழைக்கே சாலையின் பல்வேறு இடங்களில் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. சாலையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பள்ளங்கள் குறித்த காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
புதிய சாலையில் பள்ளங்கள்
இந்த பள்ளங்களால் பல வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், வாகனங்களின் டயர்கள் சேதமடை வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரூ.12,000 கோடி செலவு செய்து கட்டிய உலகத்தரம் வாய்ந்த சாலை வெறும் 79 நாட்களில் இப்படி ஆவதா? என கட்டுமானத்தின் தரம் குறித்து மக்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஒன்றிய பாஜக அரசு மீது கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் கடும் விமர்சனம்
“பிரதமர் மோடி திறந்து வைத்த 2 மாதங்களிலேயே ரூ.12,000 கோடி திட்டத்தில் பெரிய பள்ளங்கள் விழுந்திருப்பது, இந்த சாலை கட்டுமானத்தில் நடந்துள்ள இமாலய ஊழலையும், முறைகேட்டையும் காட்டுகிறது. நாடு முழுவதும் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையக் கூரைகள் என உள்கட்டமைப்புகள் தொடர்ந்து சரிந்து வருவது கவலையளிக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
ஊழலுக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? ஒவ்வொரு துறையிலும் பகிரங்கமான கொள்ளை நடக்கிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
