அய்தராபாத்தில் நீட் தேர்வின்போது கழிவறையில் கைப்பேசி மூலம் விடை தேடிய மாணவர் கைது!

2 Min Read

ராகன்னகுடா, ஜூன் 24- நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம் அய்தராபாத் அடுத்த அடிபட்லாவில் உள்ள ராகன்னகுடா மாவட்ட உயர்நிலைப்பள்ளி மய்யத்திலும் நீட் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தேர்வு மய்யத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, தேர்வர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு தொடங்கி சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மாணவர் ஒருவர் தனக்கு கடுமையான வயிறு வலி இருப்பதாகக் கூறி, கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று கழிவறைக்குச் சென்றுள்ளார்.

கழிவறைக்குச் சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் தேர்வறைக்குத் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பாளர்கள், கழிவறைக்குச் சென்று அந்த மாணவரை வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.

அப்போது, உள்ளே இருந்த மாணவர் தனது கைப்பேசியில் ‘கூகுள் குரோம்’ (Google Chrome) செயலியைப் பயன்படுத்தி, நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளைத் தேடிக் கொண்டிருந்தது கையாளுமாக கண்டுபிடிக்கப்பட்டது.

ப்ளஷ் டேங்க்கில் மறைக்கப்பட்ட கைப்பேசி

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவரைப் பிடித்த அதிகாரிகள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்த கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகின:

முன்கூட்டியே திட்டம்: அந்த மாணவர் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே, காலை 7 மணிக்கே தேர்வு மய்யத்திற்குள் நுழைந்துள்ளார்.

நூதன மறைப்பு: தனது கைப்பேசியை ஒரு ‘ஜிப்லாக்’ (Ziplock) பிளாஸ்டிக் உறையில் போட்டு, கழிவறையில் உள்ள ப்ளஷ் டேங்க்கிற்குள் (Flush Tank) யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார்.

ஏமாற்றப்பட்ட ஊழியர்கள்: தேர்வு மய்ய ஊழியர்கள் காலை 6 மணி மற்றும் 11 மணி என இருமுறை தீவிர சோதனை நடத்திய போதிலும், ப்ளஷ் டேங்க்கிற்குள் கைப்பேசி மறைத்து வைக்கப் பட்டிருந்ததை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மாணவர், தேர்வின் போது வயிறு வலிப்பதாக நாடகமாடி கழிவறைக்குச் சென்று விடை தேடியுள்ளார். இந்த நூதன முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், மாணவரை முறைப்படி கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *