திண்டுக்கல், ஜூன் 21- திண்டுக்கல் மாவட்டம் முதிமலை, அய்யலூர், கோடாங்கி குட்டு மற்றும் கரந்தமலை ஆகிய மலைப்பகுதியில் இருந்து பாலாறு உற்பத்தி ஆகிறது. இந்த காட்டாறு திருச்சி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டம். சிங்கம்புணரி, திருப்புத்தூர் வழியாக ராமநாதபுரம் வரை செல்கிறது.
இதில் மதுரை மாவட்டம், பொட்டல்பட்டி கிராமம் சூரம்பட்டி பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற பணி அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடுப்பணை அமைந்தால் பெரிய மழை பெய்தால் மட்டுமே சிங்கம்புணரி பகுதிக்கு தண்ணீர் வரும் நிலை ஏற்படும். பாலாற்றில் நீரின் அளவு குறைந்து விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை காளாப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து 19.6.2026 அன்று விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. சிங்கம்புணரி சேவகப் பெருமாள் கோயிலில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் ஆகியோர் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக பேருந்து நிலையத்தை அடைந்ததும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், சிங்கம்புணரியில் வணிகர் நலச்சங்கம் சார்பாக காலை முதல் மதியம் வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அரசு தடுப்பணை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டப் போராட்டமாக தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
