மதுரை, ஜூன் 21 தமிழ்நாட்டில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்தது முதலே அய்ஏஎஸ் மற்றும் அய்பிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆட்சியர் மாற்றம்: கடந்த ஜூன் 1-ஆம் தேதி மதுரை ஆட்சியராகப் பொறுப்பேற்ற ஆகாஷ், பதவியேற்ற 19 நாட்களிலேயே சிவகங்கை மாவட்டத்திற்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கடந்த 18-ஆம் தேதி பிற்பகல் பொறுப்பேற்ற நிஷாந்த் கிருஷ்ணா, அங்கு ஒரே ஒரு நாள் மட்டுமே முழுமையாகப் பணியாற்றிய நிலையில், மறுநாள் காலையிலேயே மதுரை ஆட்சியராக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரைக்கும் சிவகங்கைக்கும் இடையே வெறும் 44 கி.மீ தூரமே உள்ள நிலையில், இரு அதிகாரிகளும் தாங்களாகவே பரஸ்பர இடமாற்றம் (Mutual Transfer) கேட்க வாய்ப்பில்லை என்றும், இருவருக்கும் இந்த மாவட்டங்கள் சொந்த ஊரும் அல்ல என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த மாற்றத்திற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என வருவாய்த்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கடந்த வாரம் மதுரைக்கு அமைச்சர்கள் ஆய்வுக்கு வந்திருந்த நிலையில், தவெக முக்கிய அமைச்சர்களின் தலையீடு ஏதேனும் இதில் உள்ளதா அல்லது அதிகாரிகள் தரப்பில் அமைச்சர்கள் ஏதேனும் குற்றம் கண்டறிந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெக அரசில் தங்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என அதிகாரிகள் பாகுபடுத்திப் பார்க்கப்படுகிறார்களோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
வருவாய்த்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்த அதிரடி மாற்றத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் பேசப்படுகின்றன: ஆளுங்கட்சியினருக்கு அதிருப்தி: மதுரை ஆட்சியராக இருந்த ஆகாஷ், பொறுப்பேற்றது முதல் கிராமம் கிராமமாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதோடு, தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களான சமணர் படுகைகள் உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்து வந்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைகள் ஆளுங்கட்சியினருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஒரே நாளில் சிவகங்கை ஆட்சியரும், 19 நாட்களில் மதுரை ஆட்சியரும் மாற்றப்பட்ட விவகாரம் தற்போதைய அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
