சென்னை, ஜூன் 20- சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் உரையை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்து முதலமைச்சர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் மேனாள் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“வரும் 22.6.2026 (திங்கட்கிழமை) சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத முதலமைச்சர் விஜய், அவையில் மவுனம் காக்கிறார். பின்னர் வீட்டிற்குச் சென்று, மாலையில் உடற்பயிற்சி (ஒர்க் அவுட்) செய்துவிட்டு, எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிலளித்து வருகிறார்.
சட்டமன்றக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத தங்களின் பலவீனத்தை மக்கள் பார்த்துவிடுவார்கள் என்ற பயத்தினாலேயே நேரலை தவிர்க்கப்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, 22.6.2026 அன்று எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிற சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ஆற்றும் உரைகளை முறையாக நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
சட்டம் – ஒழுங்கு பிரச்சினை
“கோவை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் சிறுமிகளுக்கு எதிராகக் கொடூரமான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. இதைக் கண்டித்து, எதிர்க்கட்சியாகிய நாங்கள் களத்திற்கு வரும் முன்பே, பொதுமக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டனர்.
“காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இதற்குப் பதிலளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?”
அவருக்குப் பதிலாக, காவல்துறைக்கு அவரே ஒரு ‘நிழல் அமைச்சர்’ போல மற்றொரு அமைச்சர் பேசி வருகிறார். முதலமைச்சர் உடனடியாக இந்தச் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.” இவ்வாறு மேனாள் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
