முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு
ஆர்.எஸ்.பாரதி கேள்வி
சென்னை, ஜூன் 18–- செங்குன்றம் அருகே நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு மற்றும் தவெக தலைவர் ஜோசப் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மக்களின் ஏமாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் ஜோசப் விஜய்யை நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால், அவர் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு வாய் திறக்காமல் தொடர்ந்து மவுனமாகவே இருந்து வருகிறார். கடந்த ஒரு மாத காலத்திலேயே அவரது சாயம் வெளுத்துவிட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அண்மைக்காலமாக பாலியல் வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இதனால், தற்போதைய சூழலில் திமுக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
விஜய்யின் மவுனம்
தவெக ஆட்சி குறித்து 6 மாதங்களுக்கு கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தோம். நாங்கள் தவெக அரசின் 6 மாத சாதனைகளுக்குத்தான் கால அவகாசம் கொடுத்தோம்.
ஆனால், தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் எந்தவொரு கருத்தும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார். அண்மைக் காலமாக நடப்பவற்றை கண்டு தாங்க முடியாத வேதனை ஏற்பட்டுள்ளது.
“மக்களின் பிரச்சினைகளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் காட்டி வரும் அலட்சிய நடவடிக்கைகளைக் கண்டித்து, தமிழ்நாட்டில் விரைவில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்.” என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறினார்.
