சென்னை, ஜூன் 16– சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் சிஎம்டிஏவுக்கு மாற்றம் செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட் டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டட திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காக பல அடுக்குமாடி (High Rise Buildings) திட்ட அனுமதி (Planning Permission) வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (CMDA) வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுநாள் வரை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கான திட்ட அனுமதியானது, அபிவிருத்தி செய்பவர்களால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு, அவ்விண்ணப்பத்தை கள ஆய்வு மற்றும் கூர்ந்தாய்வு செய்து பல அடுக்குமாடி கட்டடக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு பல அடுக்குமாடி கட்டடக் குழுவால் பரிசீலனை செய்து அக்குழுவின் பரிந்துரையின்படி அரசுக்கு சமர்பித்து அரசாணை பெற்ற பின் பலஅடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டட திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காகவும், ஏற்கெனவே பின்பற்றப்படும் நடைமுறையினால் ஏற்படும் கால தாமத்தை தவிர்ப்பதற்காகவும், இனிவரும் காலங்களில் அபிவிருத்திதாரருக்கு ஏற்படும் கால தாமதம் குறைப்பதற்காகவும், குறைந்த நேரத்தில் ஒப்புதல்களை வழங்கவும், கட்டட விதிமுறைகள் மற்றும் கட்டட விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டடக் குழுவின் பரிந்துரையின் அடிபப்டையில், பல அடுக்குமாடி கட்டடங்களுக்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமே வழங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
