பொன்னேரி, ஜூன் 13– பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முகப்பில், மாணவியரின் பாதுகாப் பிற்காக, ‘பிங்க்’ மகளிர் உதவி காவல் மய்யம் அமைக்கப்பட்டிருப்பது, மாணவியர், பெற்றோர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 1,800க்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு, பள்ளி விடும் மாலை நேரங்களில், மாணவியர் மொத்தமாக வெளியேறி, பொன்னேரி – திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலை வழியாக வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
அச்சமயங்களில், ‘பைக் ரோமியோக்கள்’, பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
அதையடுத்து, தற்போது பள்ளி முகப்பில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், ‘பிங்க்’ மகளிர் உதவி காவல் மய்யம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மகளிர் உதவி காவல் மய்யத்தின் அருகில், மாணவியரின் பாதுகாப்பிற்காக, மூன்று இடங்களில், 12 ‘சிசிடிவி’க்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அவை, காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. இந்த மகளிர் காவல் உதவி மய்யம், நேற்று முன்தினம் (11.6.2026) பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பொன்னேரி உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் நடந்த இந்த விழாவில், பொன்னேரி காவல் ஆய்வாளர் தமிழன்பன் முன்னிலை வகித்தார். காவல் நிலைய அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இந்த மகளிர் காவல் உதவி மய்யத்தில், அரசுப்பணிகளுக்கான தேர்வு எழுதுவோருக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள், அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாணவியர் மற்றும் மகளிர், அவசர உதவி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு, தேவையான உதவி மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
