
பேராசிரியர்
மு.நாகநாதன்
அளப்பரிய ஆற்றல்
தொய்வில்லாமல் தொண்டு செய்தல்
எதைக் கண்டும் அஞ்சாமல் இருத்தல்
பெரியார் அண்ணா ஆகியோரின்
கொள்கையைப் போற்றுதல்
தேர்தல் வெற்றி தோல்விகளை
இலகுவாக எடுத்துக் கொள்ளுதல் !
அரசியல் பணியையும்
தமிழ்ப் பணியையும் ஒருங்கிணைத்துச்
சோர்வின்றி நீங்கள் நடந்து சென்ற
பாதையில்
பல அறைகூவல்கள்!
சந்தித்த சதிகள் பல!
அவற்றில் ஒன்று!
1989 ஆம் ஆண்டில்
13 ஆண்டுகளுக்குப் பின்பு
திமுக வெற்றி பெற்று நீங்கள் முதல்வர்!
இரண்டு ஆண்டுகளில் உங்கள் ஆட்சி
புதுடில்லி ஆதிக்க புரியினரால் கலைக்கப்பட்டது!
செய்தி வந்த மாலையில்
அறிவாலயத்தில் உங்களைச் சந்தித்தேன்
‘‘நாளை வழக்கம் போல நடைப்பயிற்சிக்கு
வந்துவிடு’’ என்று கூறினீர்கள்.
காலை 5 மணிக்கு வந்தீர்கள்
நண்பர் சிவபூசணம்
‘‘நேற்று இரவே பாதுகாப்புப் பணியில் இருந்த
காவல்துறையினர் சென்று விட்டனர்’’ என்றார்!
‘‘மேலிட ஆணை
அவர்கள் மேல் குறையில்லை!’’
நமது தொண்டரணித் தோழர்களை
மறுநாள் முதல்
அறிவாலயப் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட செய்தீர்கள்!
நாளை முதல்
‘‘1330 குறள்களுக்கு உரை எழுதும்
பணியைத் தொடங்குகிறேன்’’ என்று
உரைத்தீர்கள்!
நாளும் திருக்குறளுக்கு
‘முரசொலி’யில் விளக்க உரை அளித்தீர்கள்!
1995 ஆம் ஆண்டில் கலைஞரின்
திருக்குறள் உரை வெளியீட்டு விழா!
சொல்லியதைச் செய்தீர் !
இன்று உங்கள் திருக்குறள் உரை
பல பதிப்புகளைக் கண்டு வருகின்றன!
உரை மட்டுமா தந்தீர்கள்
தமிழ் நாட்டின் தலைநகரில்
எழில்மிகு வள்ளுவர் கோட்டம் அமைத்தீர்கள்!
கன்னியாகுமரியில் முக்கடல் இணைவில்
உயர்ந்து நிற்கும் வள்ளுவருக்குச்
சிலை கண்டீர்கள்!
உங்களோடு 60 ஆண்டு தொடர்பு
நவில் தோறும் நூல் நயம் போன்றது!
காலம் எனக்கு வழங்கிய கொடை!
எண்ணி எண்ணி நெகிழ்கிறேன்!
