விழுப்புரம், மே 30 விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் (28.5.2026) கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சில கோரிக்கைகளை முன்மொழிந்துள்ளார். தமிழ்மொழிக்கும், தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலிடத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதனை பிரதமர் ஏற்க வேண்டும். மேகதாது அணை கட்டுவது தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களில் கருத்துக்களை கேட்காமல் செயல்படுத்துவது ஏற்கமுடியாது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கடந்து அணை கட்டுவதை தடுக்க ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் நீண்டகால பிரச்சினையான மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணவேண்டும். கீழடி தொடர்பான அறிக்கை வெளியிடவும், அகழாய்வுப் பணிகள் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏற்தக்கதல்ல.
அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது குறித்தும், 90 சதவீதம் அதிமுகவினர் தவெகவிற்கு வந்துவிடுவார்கள் என்று ஆதவ்அர்ஜூனா கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு, ‘‘இது தமிழ்நாட்டின் மக்களின் விருப்பங்களுக்கு மாறானது. மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறானது. தமிழ்நாடு பின்பற்றுகின்ற அரசியல் நெறிமுறைக்கு மாறானது. தவெகவிற்கு இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவே போதுமானது. எனவே, சட்ட நெறிமுறைக்கு எதிரான செயலில் ஈடுபடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கிறேன். அதிமுக ஒரு ஜனநாயக சக்தி. அதேபோல் திமுக ஒரு ஜனநாயக சக்தி. கொள்கை, கருத்தியலால் மட்டுமே ஒன்றை, ஒன்று எதிர்த்து போராட வேண்டுமே தவிர, ஒருகட்சி மற்றொரு கட்சியை வீழ்த்த நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒருவர் விருப்பத்தின்பேரில் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த முறை ஏற்கத்தக்கதல்ல’’ என்று வீரபாண்டியன் பதிலளித்தார்.
