புதுடில்லி, மே 17- “நீதித்துறை அமைப்பை தாக்கும் ஏராளமான ஒட்டுண்ணிகள் சமூகத்தில் உள்ளனர்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.
டில்லி உயர்நீதிமன்றத்தில் முதுநிலைத் தகுதி வழங்கப்படவில்லை எனக்கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர்மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி பக்ஷி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், உலகம் முழுதும் பலர் முதுநிலை (சீனியர்) என்ற தகுதி பெற்றிருக் கலாம். ஆனால் அந்த தகுதியை நீங்கள் பெறவில்லை. உயர்நீதிமன்றம் உங்களை சீனியர் என அறிவித்தாலும், உங்களின் நடத்தையை கருத்தில் கொண்டு நாங்கள் ரத்து செய்வோம் என்றார்.
தொடர்ந்து பக்ஷி கூறுகையில், முதுநிலையை உறுதி செய்வதை தவிர உங்களுக்கு வேறு வழக்கு இல்லையா? முதுநிலையை எதிர்பார்க்கும் ஒருவரின் தகுதி இதுதானா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் முதுநிலை என்பது நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஒரு அங்கீகாரம். அதை கேட்டு பெறக்கூடாது எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி, ‘ நீங்கள் முதலில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். பிறகு மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் ஆதாரமற்ற வழக்குகளை தாக்கல் செய்வதால், அவருக்கு எந்தவொரு முதுநிலைத் தகுதியும் பெறத் தகுதியில்லை எனவும் கூறினார்.
இதனையடுத்து, மனுதாரர் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்டு, இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
பிறகு தலைமை நீதிபதி கூறுகையில், டில்லியை சேர்ந்த பல வழக்குரைஞர்கள் பெற்றுள்ள பட்டங் களின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் உள்ளது. பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிடும் கருத்துக்களை பார்த்து இந்த சந்தேகம் ஏற்படுகிறது. அதனை நாங்கள் பார்க்கவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? இது குறித்து சிபிஅய் விசாரிக்க தகுந்த வழக்குக்காக காத்திருக்கிறோம் என்றார்.
வழக்குரைஞரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு முன்னர் பிறப்பித்த உத்தரவைத் திரும்ப பெற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கூறுகையில், “நீதித்துறையை தாக்கும் ஒட்டுண்ணிகள் சமூகத்தில் ஏற்கெனவே உள்ளனர். அவர்களுடன் நீங்கள் சேர்ந்து செயல்பட விரும்புகிறீர்களா? பல இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு எந்த தொழிலிலும் இடமில்லை. அவர்களில் சிலர் மீடியாவை சேர்ந்தவர்கள். சிலர் சமூக ஊடகவியலாளர்கள் ஆகின்றனர். சிலர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஆகிறார்கள். அவர்கள் எல்லாம், அனைவரையும் தாக்க துவங்குகின்றனர்.. நீங்களோ நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
