கேள்வி: தங்களால் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘திராவிட ஃபார்முலா’ மீண்டும் தேவைப்படும் அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளதே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில்: “அவசியமும் அவசரமும்” என்று குறிப்பிட்டிருக்கிறீரே, அவசியம் வந்தது; ஆனால், அதற்குரிய அவசரம் கனியவில்லை. காலம் அடுத்தடுத்து கனிய வைக்கக் கூடும்.
- • • • •
கேள்வி: மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அமாவாசை அன்று மட்டும் துன்பம் அதிகம் அடைவார்கள் என்ற நம்பிக்கை அழுத்தமாகச் சமூகத்தில் காணப்படுகின்றதே – உரிய விளக்கம் தருவீர்களா?
– ம.அரசு, புழல், சென்னை
பதில்: அதற்கு அறிவியல்ரீதியாகக் காரணமில்லை. மனோதத்துவ நிபுணர்களின் கட்டுரைகள் மூலம் இதுபற்றி விரைவில் நமது ஏட்டில் தெளிவுபடுத்த வைப்போம்.
- • • • •
கேள்வி: இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்குக் கிடைக்குமா?
– மு.கண்ணன், முண்டியம்பாக்கம்

பதில்: உடனே (15.5.2026) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வந்து விழுந்துவிட்டதாகச் செய்தி.
- • • • •
கேள்வி: ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வராததற்கு யார், யார் வருத்தப்பட வேண்டும்?
– க.கண்மணி, சென்னை–14
பதில்: நன்றி மறவாதவர்கள் அனைவரும் வருத்தப்பட வேண்டும்!
- • • • •
கேள்வி: “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாடும்” எதைக் காட்டுகிறது?
– சு.வில்லவன், உடையார்பட்டி

பதில்: பண்பாடு மிக்க, தோல்வியிலும் துவளாத, தேர்தல் முடிவு தெரிந்த அடுத்த நாளே நன்றி சொல்ல, தொகுதிக்குச் சென்ற முன்னுதாரணம், வாக்களிக்கத் தவறியவர்களையும் வெட்கப்பட வைக்கத்தக்கது. “வீரச்செயல்” – மலை குலைந்தாலும் மனங் குலையாத மகத்தான போர்த்தளபதி அவரே என்பதை உலகுக்குக் காட்டும்!
- • • • •
கேள்வி: தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்துவ இன்ஸ்டிடியூசன் அமைப்புகளில் த.வெ.க. தலைவர் ச.ஜோசப் விஜய் கட்சியான த.வெ.க.விற்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்று முடிவெடுத்ததாகச் சொல்லப்படுவது உண்மையா?
– பா.செல்வன், திருவள்ளூர்
பதில்: நாமறியோம்; இருக்கக் கூடும் – அப்படியாயினும் அது அதிசயமல்ல!
- • • • •
கேள்வி: எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க.வில் மேலும் பிளவு ஏற்படுமா?
– செ.அப்பு, கன்னியாகுமரி
பதில்: எல்லாம் டில்லியின் சித்து வேலைகளும், திருவிளையாடல்களும், பொம்மலாட்டங்களுமே!

ஆட்டுக்குட்டித் தன் பாதுகாப்புக்காக ஓநாயிடம் ஒண்டியப் பரிதாப நிலையின் விளைவுகள்!
- • • • •
கேள்வி: தமிழ்நாடு புதிய சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை சிறப்பானதா, சிந்திக்கத்தக்கதா?
– ம.மணி, செங்கல்பட்டு
பதில்: சிறப்பானதும், சிந்திக்க வைக்க வேண்டியதாக அமைந்த சீரிய உரை!
- • • • •
கேள்வி: தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்வுகளுக்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் பின்புலம் இருக்கிறதா?
– வெ.அங்கையற்கண்ணி, மதுரை
பதில்: அதில்லாமலா? எல்லா வேலைகளுக்கும் மூலாதாரம் அங்கிருந்துதான்! அதுதானே அவர்களது வழமை! வாடிக்கை!!
- • • • •
கேள்வி: கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அதுகுறித்துத் தங்கள் கருத்து?
– கே.எழில், சேலம்

பதில்: முக்கோணப் போட்டியில் இப்போது வென்றுள்ளார். இது நிலைத்து நீடிக்க வேண்டுமே – காங்கிரசின் ‘போஸ்டர்’கள் தொடர்ந்ததைப் பார்த்தால் உண்மை ஒருங்கிணைப்பு யதார்த்தம் எப்படியோ? பரவாயில்லை – சஸ்பெண்ஸ் முடிந்தது!
- • • • •
