நமது பிரதமர் மோடி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பதவியேற்றபோது தவறாது உச்சரித்த ஹிந்தி வார்த்தைகள் மக்கள் காதுகளைப் பிளந்தன!
‘‘சப்கா சாத்; சப்கா விகாஸ்’’ வளர்ச்சி, வளர்ச்சி என்றார். எல்லாவற்றையும் உள்ளடக்கிய ‘‘Inclusive growth’’ என்ற பொருள்படக்கூடிய சொற்கள் எதிரொலித்ததோடு, உலகிற்கே தலைமை தாங்கி வழிகாட்டக்கூடிய வகையில் இந்தியா ‘விஸ்வகுரு’ ஆகிறது என்றார்!
டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் நிலை நாளும் வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கிறது என்றார். அவர் செல்லாத நாடு இல்லை; அவற்றைச் சொல்லாத நாள் இல்லை! அடடா! அடடா!!
ஆனால், இப்போது மேற்காசிய போர் என்ற திணிக்கப்பட்ட போரின் காரணமாக, ஏழு மகாமகா அரிய ஆலோசனைகளை ‘அம்ரித் கால் ஆட்சி’ நடக்கும் நாட்டி னருக்கு இப்போது வழங்கி வருகிறார்! என்னே சிறப்பு!
முந்தைய ‘‘மோடிஜி கியாரெண்டிகளை’’ யெல்லாம்தான் இப்போது ‘ஸ்ப்த ஸ்வரங்களில்’ புதிய ராகங்களாகப் பாடுகின்றன!
- முடிந்தவரை வீட்டிலேயே இருந்து வேலை பாருங்கள்.
- திருமணத்துக்குக் கூட யாரும் தங்கம் வாங்கவேண்டாம்.
- பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள். வெளியில் கார்களில் செல்வதைத் தவிருங்கள். மாற்றாக, மின்சார கார்களில் பயணம் செய்யுங்கள்.
- சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
- விவசாயிகளே, உங்கள் வயல்களில், யூரியா உரம் போடுவதைத் தவிருங்கள்.
- வெளிநாட்டுப் பொருள்கள் வாங்குவதைத் தவிருங்கள். இயற்கை விவசாயத்திற்குத் திரும்புங்கள் (ஏர்கலப்பைக்கு).
- விமானப் பயணங்கள் – சுற்றுலா போக வேண்டாம்!
அடடா, என்னே அற்புத அறிவுரை!
பலே, பலே! இதற்கே அவருக்கு அவசரமாக ‘பாரத ரத்னா’ அல்லது அதைவிட உயர்ந்த ‘நோபல் பரிசு’க்குக்கூட சிபாரிசு செய்யலாம் என்று பாரத ஜன சமூகத்தினரிடமிருந்து குரல்கள் எழும்.
ஆம்! ஆம்! ‘பகுத் அச்சா!’
கரோனா காலத்தில், ‘‘ஓங்கிக் கைதட்டினால், கரோனா ஓடிவிடும்’’, ‘‘எல்லோரும் வீட்டில் விளக்கேற்றினால், கரோனா ஒழிந்துவிடும்’’ என்பது போன்ற ‘உயரிய’ ஆலோச னைகள் தந்த வரிசையில், இவற்றிற்குச் ‘‘சிறப்பு இடம்’’ நிச்சயம் உண்டு!
இன்னும் சில மாதங்களில், ‘‘அன்றாடம் இருமுறை உபவாசம் இருங்கள்; உணவு மிச்சமாகும், உடலும் தேறும். வீட்டுக்குள்ளே இருந்து பழக்கப்படுங்கள்’’ என்று சொல்வாரோ?
பிரெஞ்சு நாட்டில், ‘‘உண்ண உணவின்றி, ரொட்டியின்றி தவிக்கிறமே’’ என்று மக்கள் கேட்டபோது, அந்த நாட்டு ராணி மேரி அன்டாய்னட் என்பவர், ‘அதற்குப் பதில் கேக் சாப்பிடலாமே’’ என்ற அரிய ஆலோசனை சொன்ன கதையைப் படித்திருக்கிறோம். அவற்றை மிஞ்சியது, ‘‘மின்சார வாகனங்கள் வாங்கி, அதில் பயணம் செய்யுங்கள்’’ என்ற பிரதமர் மோடியின் ஆலோசனை.
இதுபற்றி ஓர் ஆங்கில நாளேடு, ‘‘ஊருக்கு உபதேசம் செய்பவர், எவ்வளவு தூரம் இதைக் கடைப்பிடிப்பார்?’’ என்று கேள்வி கேட்டுள்ளது.
அண்மைக்காலமாக பிரதமரின் வெளிநாட்டு சுற்றுலா மிகவும் குறைந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.
‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!’
‘புல்லட் ரயில்கள் வேண்டும் – நிச்சயம் வரும் என்பது சிக்கன கோடரியின் சிறப்பு அம்சங்கள் புரியாது திகைக் கின்றது பாரத நாடு, எம் பழம்பெரும் நாடு திகைக்கிறது.
‘சும்மா இருப்பதே சுகம் சுகம்’ என்று இருந்தால், எல்லாம் மிச்சம் என்பது
சுகினோ பவந்து! ஜே! ஜோ!!
