சென்னை, மே 13- திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (14.5.2026) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் அரசியல் பணிகள் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உ.பி முன்னாள் முதலமைச்சர்
முலாயம் சிங்கின்
இளைய மகன் பிரதீக் மறைவு
இளைய மகன் பிரதீக் மறைவு
லக்னோ, மே 13- உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் (38) உயிரிழந்தார்.
இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவசரமாக லக்னோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது. அதன் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் பாஜ தலைவர் அபர்ணாவின் கணவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேசின் சகோதரரும் ஆவார்.
பிரதீக் நீண்ட காலமாக நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு
பாறைகள் உருண்டு விழுந்ததால் பதற்றம்!
இமாச்சல், மே 13- கின்னூர் மாவட்டத்திலுள்ள பாவ்நகர் (Bhabanagar) சந்தைக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை – 5 (NH -5) பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து பாறைகளும் மற்றும் இடிபாடுகளும் சரிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. அந்த சமயத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள தனியார் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளே இந்த நிலச்சரிவு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலச்சரிவில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் தெரிவித்தனர். மேலும், நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்!
சென்னை, மே 13- தமிழ்நாட்டில் அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நிதித்துறைச் செயலாளர் – சித்திக், வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் – முருகானந்தம், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் – நந்தகுமார், சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை முதன்மைச் செயலாளர் – சுவர்ணா, அய்ஏஎஸ் அதிகாரிகள் உதயசந்திரன், அமுதா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். முதலமைச்சரின் 3ஆவது தனிச் செயலாளராக அண்ணாதுரை, முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக விஷ்ணு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
