சென்னை, மே 12- அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்படுவார் என்று கூறி அக்கட்சியின் 30 சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதங்களை சி.வி.சண்முகம் தற்காலிக பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் கடும் குழப்பமும், அதிருப்தி குரல்களும் எழுந்துள்ளன. ஒட்டுமொத்தமாக உள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 பேர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், எஞ்சிய 17 சட்டமன்ற உறுப்பினர்கள் இபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
இதனால் அ.தி.மு.க. சட்டமன்றக் குழு தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் நிலவியது. சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் இபிஎஸ்சை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக கூறி அதற்கான கடிதத்தை தற்காலிக அவைத் தலைவரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் 30 பேர் தலைமைச் செயலகம் வந்தனர். தற்காலிக அவைத் தலைவர் கருப்பையாவை சந்தித்து
எஸ்.பி.வேலுமணி கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக செயல்படுவார் என்று கூறி அதற்கான ஆதரவு கடிதங்களை அளித்தனர்.
மேலும் கட்சிக் கொறடாவாக சி.விஜயபாஸ்கர் செயல்படுவார் என்றும் கூறி, அதற்கான கடிதத்தையும் ஒப்படைத்தனர். இந்த ஆதரவு கடிதங்களை தொடர்ந்து, அதிமுகவின் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது, உறுதியாகி இருக்கிறது.
அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமி எதிர்ப்புக் குழு திட்டவட்டம்
Leave a Comment
