காந்திநகர், மே 6- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் மகாராட்டிரா அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கும், பிரம்மாண்ட இணையவழி மோசடி கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பை குஜராத் மாநில சைபர் பிரிவு காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இணையவழி மோசடி
இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்த குஜராத் காவல் துறையினர் ‘ஆபரேஷன் மியூல் 2.0′ (Operation Mule 2.0) என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் நகரைச் சேர்ந்த சாஹில்மியா ஷபீர்மியா மாலேக் என்பவரின் வங்கி கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய சல்மான் வோரா என்பவருக்கு, சாஹில்மியா தனது கருநாடக வங்கி கணக்கு எண்ணை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்காக வழங்கியது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சாஹில்மியாவிடம் நடத்திய தீவிர விசாரணையில் பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன:
ரூ.53 கோடி மோசடி
இந்த கும்பல் இந்தியா முழுவதும் சுமார் 20 மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இணையதளம் வழியாக ரூ.53.55 கோடி வரை மோசடி செய்துள்ளது. மோசடிப் பணத்தை மறைக்கப் பயன்படுத்தப்படும் வங்கி கணக்குகளை வழங்கியதற்காக, சம்பந்தப்பட்ட நபர்கள் பெரும் தொகையை கமிஷனாகப் பெற்றுள்ளனர்.
இந்தச் சதித்திட்டத்தில் தொடர்புடைய மேலும் 9 பேரை சைபர் பிரிவு காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பாபா சித்திக் கொலை வழக்குக் குற்றவாளிகளுடன் பணப் பரிவர்த்தனை தொடர்பில் இருந்த இந்த கும்பல், பன்னாட்டு அளவிலான மோசடி நெட்வொர்க்குடன் இணைந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கைதானவர்களிடமிருந்து ஏராளமான சிம் கார்டுகள், வங்கி ஆவணங்கள் மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
