சென்னை, மே 6- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நட்சத்திரத் தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
அதே சமயம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இந்தத் தொகுதியில் தொடக்கம் முதலே உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
டெபாசிட்டை
இழந்தது அ.தி.மு.க.
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் வெறும் 16,507 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். தேர்தல் விதிகளின்படி பதிவான வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தைப் பெறத் தவறியதால், ஆதி ராஜாராம் தனது டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேப்பாக்கம் தொகுதியில், இரண்டாவது முறையாக களம் கண்ட உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார்.
அதே வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இங்கு டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தொகுதியில் பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் 6இல் ஒரு பங்கு (1/6) வாக்குகளைப் பெறத் தவறினால் வேட்பாளர் தனது வைப்புத் தொகையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
