கருநாடகாவில் நடைபெற்ற CET (பொது நுழைவுத் தேர்வு) தேர்வின்போது, பெங்களூரு மடிவாளாவில் உள்ள கிருபாநிதி கல்லூரியில் பூணூல் அணிந்து வந்த 5 மாணவர்களை, அங்கிருந்த 3 பேராசிரியர்கள் நீங்கள் தேர்வு எழுத விரும்பினால், பூணூலை அகற்றவேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டனர். மாணவிகள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள் அகற்றப்பட்டன.
இதுபற்றி பூணூல் மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, மாணவர்களின் பூணூலை அகற்றிய 3 பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
பெண்கள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட அணிகலன்களை அகற்றும்போது எழாத பிரச்சினை, பார்ப்பன மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்றும்போது மட்டும் பொத்துக்கிட்டுக் கிளம்புகிறது பிரச்சினை. சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை தற்காலிக வேலை நீக்கம் (suspension) செய்யும் அளவுக்குச் செல்லுகிறது என்றால், இதன் பொருள் என்ன?
பூணூல் என்பதும் அணியப்பட்ட ஒன்றுதானே! முஸ்லிம் பெண்கள் மேலே அணியும் ஹிஜாப் ஆடையை அணிந்து வரக்கூடாது என்று இதே கருநாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் நிர்வாகம் தடுத்ததுண்டு. அது உச்சநீதிமன்றம் வரை சென்றதுண்டு.
இங்கே எல்லாம் தலையிட அதிகாரம் உண்டு; ஆனால், பார்ப்பனர்கள் தங்கள் உயர்ஜாதி (துவிஜாதி – அதாவது இரு பிறவியாளர்கள்) ஆணவத்தை வெளிப்படுத்தும் பூணூலை அகற்றினால் (பேராசிரியர்களுக்கு ஒன்றும் உள்நோக்கம் கிடையாது) ‘ஆகா!’ என்று ஆகாயமே இடிந்து விழுந்ததுபோல் அலறுகிறார்கள்; காவல்துறைக்குப் புகார் பறக்கிறது. கல்வித் துறை சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை இடை நீக்கம் செய்கிறது என்றால், இதன் பொருள் என்ன?
இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா? பார்ப்பனர்கள் பூணூல் அணிவது என்பது அழகுக்காகவா? ஆடம்பரத்திற்காகவா? மாறாக தாங்கள் பிரம்மாவின் நெற்றியிலே உதித்தவர்கள் – இரு பிறவியாளர்கள், மற்ற பார்ப்பனரல்லாதவர்கள் சூத்திரர்கள், பிரம்மாவின் கால்களிலே பிறந்தவர்கள் என்று அறிவிக்கும் விளம்பரப் பலகைதானே!
– மயிலாடன்
