திருப்பூர், மே.3 ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை நீட்டிக்காததால், நூல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரான திருப்பூரின் பின்னலாடைத் தொழிலை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
விலை உயர்வின் பின்னணி
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஜவுளித் தொழில் பிரதானமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வெளிநாட்டுப் பருத்திக்கு 11% இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பருத்தி மற்றும் நூல் விலை சீராக இருந்தது. ஆனால், ஜனவரி முதல் இந்த வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டதால், உள்நாட்டுப் சந்தையிலும் பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வுப் புள்ளி விவரங்கள்: கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை கிலோவிற்கு 41 ரூபாய் உயர்ந்துள்ளது. மே மாதத்திற்கான புதிய அறிவிப்பின்படி, கிலோவிற்கு மேலும் 7 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
தரமான பஞ்சு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.55,000-லிருந்து உயர்ந்து தற்போது ரூ.65,000 – ரூ.72,000 வரை விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பாலிஸ்டர் நூல் மற்றும் துணிகளின் விலையும் அதிகரித்துள்ளது.தற்போதைய நூல் விலை நிலவரம் (கிலோவிற்கு) ரூ.20-ம் நம்பர் கோம்டு நூல்: ரூ.292, 30-ம் நம்பர் கோம்டு நூல்: ரூ.314, 40-ம் நம்பர் கோம்டு நூல்: ரூ.352, 20-ம் நம்பர் செமி கோம்டு: ரூ.289, 30-ம் நம்பர் செமி கோம்டு: ரூ.300.
இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 68% பங்களிப்பை வழங்கும் திருப்பூர், இந்தத் தொடர் விலை உயர்வால் பன்னாட்டு சந்தையில் மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாமல் திணறி வருகிறது. அரசு தலையிட்டு பருத்தி இறக்குமதி வரி விலக்கை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
c
