மாஸ்கோ, ஏப். 30 – ஈரான் போர்ச் சூழல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற நிலை குறித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 90 நிமிடங்கள் தொலைப்பேசி வாயிலாக விரிவாக ஆலோசித்தனர்.
பன்னாட்டு சமூகத்திற்கு
பெரும் ஆபத்து:
இந்த உரையாடலின் போது, ஈரானில் மீண்டும் போர் நடவடிக்கைகள் தொடங்கினால் அது அந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும் ஒட்டுமொத்த பன்னாட்டு சமூகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்று புதின் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஈரானுக்கு எதிரான தரைவழித் தாக்குதல்கள் மிகவும் ஆபத்தானவை என்றும், அவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்கா அறிவித்துள்ள போர்நிறுத்த நீட்டிப்பை வரவேற்றுள்ள புதின், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தேவையான அனைத்து ராஜதந்திர முயற்சிகளுக்கும் ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க மாஸ்கோ சில முக்கியத் திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும், இது தொடர்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ரஷ்யா தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் இந்த உரையாடல் நீடித்தது.
ஈரானுடன் சேர்த்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
வரும் மே 9ஆம் தேதி ரஷ்யாவின் ‘வெற்றி நாளை’ முன்னிட்டு உக்ரைனில் தற்காலிகப் போர்நிறுத்தம் செய்ய புதின் விடுத்த கோரிக்கையை டிரம்ப் வரவேற்றதாகக் கூறப்படுகிறது.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை தொடர்ந்து வரும் நிலையில், இரு வல்லரசுத் தலைவர்களின் இந்த நீண்ட உரையாடல் உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

