இறுதி வாக்குப்பதிவு விவரம் வெளியிடுவதில் தாமதம் –
தேர்தல் ஆணையம் மீது அரசியல் கட்சிகள் கண்டனம்
சென்னை, ஏப்.30 தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து பல நாட்கள் கடந்த நிலையிலும், இதுவரை இறுதி வாக்குப்பதிவு குறித்த முழுமையான தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பீகார் தேர்தலில் 24 மணி நேரத்திற்குள் தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில்நிலவும் இந்தத் தாமதத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு நாளன்று இரவு: 85.15 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.இரண்டு நாட்களுக்குப் பிறகு: மறுசரிபார்ப்பிற்குப் பின் இது 85.10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.இருப்பினும், இதுவரை பாலின வாரியான (ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்) விவரங்களோ அல்லது மொத்த வாக்காளர்களின் துல்லியமான எண்ணிக்கையோ வெளியிடப்படவில்லை.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றுதான் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்:”வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி காலை 8 மணி வரை அஞ்சல் வாக்குகள் சேகரிக்கப்படும். சுமார் 6 லட்சம் அஞ்சல் வாக்குகள் உள்ளதால், அதுவரை முழுமையான அறிக்கையை வழங்க முடியாது. தற்போது இணையதளத்தில் உள்ள தரவுகளில் மாற்றம் இருந்தாலும் அது 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்,” என்றார்.
இருப்பினும், பீகாரில் மட்டும் எப்படி உடனடியாகத் தரவுகள் வெளியிடப்பட்டன என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.பீகாரில் சாத்திய மானது தமிழ்நாட்டில் ஏன் இல்லை? கடந்த நவம்பர் மாதம் பீகாரில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடந்தபோது, வாக்குப்பதிவு முடிந்த அன்றே இரவு 11 மணிக்குள் முழு விவரங்களும் வெளியிடப்பட்டன.
வெளிப்படைத்தன்மை எங்கே? தற்காலிகப் புள்ளிவிவரங்களில் மாற்றம் செய்வது மற்றும் இறுதித் தரவுகளை வழங்கத் தாமதிப்பது தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற அழுத் தம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகரித்துள்ளது.

