சென்னை, ஏப். 25- தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தடையை மீறி வாக்குப்பதிவு மய்யத்திற்குள் கைப்பேசி எடுத்துச் சென்று, தான் வாக்களித்ததை காணொலியாக வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மய்யத்தில் வாக்குப்பதிவு நடை பெற்றது. அப்போது தவெக நிர்வாகி ஒருவர், தேர்தல் விதிமுறைகளைத் துச்சமாக மதித்து தனது கைப்பேசியை உள்ளே எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் தனது கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்ததோடு, விவிபேட் கருவியில் சின்னம் தென்படுவதையும் காணொலி மற்றும் ஒளிப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வாக்குப்பதிவு மய்யங்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்வது மற்றும் வாக்குச் செலுத்துவதை ஒளிப்படம் எடுப்பது ஆகியவை கடுமையான குற்றமாகக்கருதப்படுகிறது.
தேர்தல் ஆணையம் ஏற்கெனவே விடுத்திருந்த எச்சரிக்கைகள்!
விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம். விதிமீறலுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாக்களிப்பதன் ரகசியத்தை உடைப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய செயலாகும். “தேர்தல் ஆணையம் இவ்வளவு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தும், ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியே பொறுப்பின்றி செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது,” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சட்டத்தை மீறி செயல்பட்ட அந்த நபர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, ஜனநாயகக் கடமையின் புனிதத்தைக் காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

