இரயிலா – கோயிலா?
“ரயில் பெட்டி என்பது வெறும் பயணம் செய்யத் தான்” என்ற நிலையை உடைத் தெறிந்து, இந்திய ரயில்வே இப்போது ‘நடமாடும் நவக் கிரக தலமாக’ உரு வெடுத்திருக் கிறது. உத்தரகாண்ட் செல் லும் குளிர் வசதிப் (ஏசி) பெட்டியில் பக்கத்தில் உள்ள மேல் படுக்கையை (Side Upper Berth) அப்படியே ஒரு குட்டிக் கோவிலாக மாற்றி, அங்கு தீபாராதனை காட்டி பஜனை பாடிய பக்தர்களின் பக்திப் பரவசக் காட்சி இணையத்தில் ‘தீயாய்’ப் பரவி வருகிறது.
முன்பெல்லாம் ரயிலில் ஏறினால் “சைடு லோயரா? சைடு அப்பரா?” என்று சண்டை போடுவார்கள். ஆனால் இனி, “சைடு அப்பர் பெர்த் சன்னதியில் தரிசனம் உண்டா?” என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. பயணச் சீட்டு எடுக்கும்போது இனி ‘Window Seat’-க்கு பதில் ‘Temple View Seat’ தேர்ந்தெடுக்கும் விருப்பம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த சுற்றுலா ரயிலில், இப்படித்தான் பக்தி என்ற பெயரில் சமையல் செய்யப்போய் தீ விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். அந்தச் சாம்பல் இன்னும் ஆறவில்லை, ஆனால் அதற்குள் ரயில் பெட்டியையே யாகசாலையாக மாற்றத் தொடங்கிவிட்டார்கள் ‘பாரத மாதா’ புத்திரர்கள்!
“நெருப்புக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்?” என்று நீங்கள் கேட்டால், “ரயில்வே அமைச்சரே பஜனை காணொலிகளைப் பகிர்ந்து ஆசி வழங்கும் போது, நாங்கள் ஒரு தீபாராதனை காட்டக்கூடாதா?” என்று பக்தர்கள் கேட்கும் நிலை ரயில் இன்ஜினை விட வேகமாக ஓடுகிறது.
ரயில்வே நிர்வாகத்தின் அடுத்தகட்ட (நையாண்டி) அறிவிப்புகள் எதிர்பார்ப்பு எதுவாக இருக்க முடியும்? பரிசோதகர் இனிப் பயணச் சீட்டை பரிசோதிக்க மாட்டார், பிரசாதம் வழங்குவார்.
படுக்கைக் (பெர்த்) கட்டணம்: இனி பயணச்சீட்டுக் கட்டணம் கிடையாது, எல்லாம் ‘தட்சணை’ தான்.
பாதுகாப்பு விதிமுறை: ரயிலில் அபாயச் சங்கிலியை (Alarm Chain) இழுப்பதற்குப் பதில், பூஜை மணியை அடித்தால் ரயில் நிற்கும்.
குளிர் வசதிப் பெட்டி குளிர்ச்சிக்காக அல்ல, சாம்பிராணிப் புகை வெளியே போகாமல் இருக்கவே பயன்படுத்தப்படும்.
ரயில்வே சட்டங்கள் எல்லாம் சாதாரண பயணிகளுக்குத்தான் போலிருக்கிறது. ஆனால், உயிருடன் விளையாடும் இதுபோன்ற ‘ஆன்மிக சாகசங்கள்’ ரயிலை ‘சொர்க்கத்திற்கு’ அழைத்துச் செல்லாமல் இருந்தால் சரி! ரயில்வே அமைச்சகமே பஜனைக்கு ‘லைட்’ அடிக்கும்போது, சாதாரண அதிகாரிகள் எங்கே ‘ரெட் சிக்னல்’ போடப்போகிறார்கள்?
அடுத்த முறை ரயிலில் ஏறும்போது கற்பூர வாசனை வந்தால், அது தீ விபத்து அல்ல… ‘தெய்வீக தரிசனம்’ என உணர்ந்து அமைதியாகப் பயணிக்கலாம்!
பிஜேபி ஆட்சியின் கேலிக் கூத்துக்கு அளவே இல்லையா? ரயில் என்பது மக்கள் பயணம் செய்வதற்கான வாகனம். அதைப் பூசைக்கான அறையாக மாற்றுவது எத்தகைய விபரீதம்!
பிஜேபி – சங்பரிவார்களைப் பொறுத்தவரை – எதிலும் மதவாதக் கண்ணோட்டம்தான்! மக்களை வேறு வகையில் சிந்திக்கவிடாமல் இந்துத்துவா கலாச்சார குடுக்கையில் அடைத்து விட்டால் போதும் என்று கருதுகிறார்கள் போலும்!
இதைப்பற்றியெல்லாம் இந்த ஊடகங்களுக்குக் கவலை இல்லை – இதனைக் கண்டித்து எழுதாது.
ரயிலில் பயணிகள் தங்களுக்குரிய இடத்தில் அமர்வதற்குமுன் ‘தினமலர்’ ஏடு உட்கார்ந்து விடுகிறது. இதனை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
‘தினமலர்’ ஏடு தனது பார்ப்பனிய நச்சுக் காற்றை நாள்தோறும் பரப்பக் கூடியதாகும். பயணிகள் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் மீது திணிக்கும் போக்கை எதிர்த்தாக வேண்டும். விரும்பாதவர்கள் வெளியே தூக்கி எறிந்தால்தான் இதற்கு ஒரு முடிவு வருமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

