இதுதான் குஜராத் மாடல்!
சூரத்தில் பொருளாதார நெருக்கடி
எரிவாயு தட்டுப்பாட்டால் வெளியேறும் 3 லட்சம் தொழிலாளர்கள்
சூரத், ஏப்.22 குஜராத் மாநிலம் சூரத்தில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, சுமார் 3 லட்சம் ஜவுளி மற்றும் வைரத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி நகரத்தை விட்டு வெளியேறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரச் சரிவும்,
எரிவாயு தட்டுப்பாடும்
மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, சூரத் நகரத்தில் ஒரு கிலோ எரிவாயு கள்ளச்சந்தையில் 500 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் நிலவுகிறது.
“வேலை இருந்தும் சமைக்க எரிவாயு இல்லாததால் பசியுடன் இருக்க வேண்டியுள்ளது. அதனால் சொந்த ஊருக்கே திரும்புகிறோம்,” என வெளி மாநில தொழிலாளர்கள் கண்ணீ ருடன் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே வைரத் தொழில் மற்றும் ஜவுளித் துறையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சரிவு காரணமாக, சுமார் 30 சதவீத பணியாளர்கள் ஏற்ெகனவே நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
உத்னா ரயில் நிலையத்தில் பதற்றம்
நேற்று (20.4.2026) சூரத் மாவட்டம் உத்னா ரயில் நிலையத்தில், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் செல்வதற்காக சுமார் 23,000 தொழிலாளர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த நிலையில், பின்வரும் இன்னல்களைச் சந்தித்தனர்: 16 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் வெயிலில் காத்திருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியதில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.
வரிசையில் நின்ற மக்களுக்குப் போதிய குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
அரசின்மீது கடும் விமர்சனம்
பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களே இந்த நிர்வாகத் தோல் விக்குக் காரணம் என எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர் சித்து வருகின்றன. “இனி மேல் இந்த நகரத்திற்குத் திரும்பவே மாட்டேன்” எனத் தொழி லாளர்கள் விரக்தியுடன் வெளியேறுவது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ரயில்வே நிர்வாகம் விளக்கம்
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மேற்கு ரயில்வே நிர்வாகம், உத்னா ரயில் நிலை யத்தில் பயணிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
“தடுப்புகளை மீற முயன்ற ஒரு சில இளைஞர்களைக் கட்டுப்படுத்தவே சிறிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் நிலையங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்,” என ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், எதார்த்த நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வெளியேற்றம் சூரத் நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

