சென்னை, ஏப்.14–- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்திருந்த முஸ்லிம் மக்கள் கழகம், தற்போது தனது ஆதரவை அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக இருப்பதே இந்த ஆதரவு திரும்பப் பெற்றதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சில காட்சிகள் இஸ்லாமியர்களுக்கும், இந்து சகோதரர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயல்.
தவெக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தலுக்காக வழங்கிய ஆதரவை தற்போது ரத்து செய்கிறோம். எமது நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் யாரும் தவெக-விற்கு வாக்களிக்க வேண்டாம்.
எதிர்காலத்தில் பாஜக அல்லது அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து, பொதுச் சிவில் சட்டம் அமலாக்கம், ஹிஜாப் தடை போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சமும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பிரசாரங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு சமுதாயக் கட்சியின் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது தவெக வேட்பாளர்களுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. விஜய்க்கு ஆதரவாகச் செல்லும் வாக்குகள் தேர்தல் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் ஜைனுதீன் விமர்சித்துள்ளார்.

