பொன்மலை, ஏப்.14- பல மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தியா கூட்டணி கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் கூட்டணிக் கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வெற்றி பெற, தி.மு.க.வின் தோழமைக் கட்சியான ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பொன்மலை, மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘அய்ந்தாண்டு கால ஆட்சியில் எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளைத் தமிழ்நாட்டில் திமுக அரசு செய்து காட்டியுள்ளது. பல மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தியா கூட்டணி கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்ததாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டனர். அந்த அளவுக்கு திறமையான ஆட்சியை நடத்தி வருகின்றார். திராவிட இயக்கத்துக்கு எந்தக் கேடும் நேராமல் பார்த்துக் கொள்வது என் கடமை.
சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், கட்டணமில்லா விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், கலைஞர் கைவினைத் திட்டம், கலைஞர் கனவு இல்லத் திட்டம், அன்புச்சோலை திட்டம், உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி நியமனம் மற்றும் மடிக்கணினி வழங்கும் திட்டம் என எந்த மாநிலமும் செய்யத் துணியாத உன்னதமான திட்டங்களை நிறைவேற்றிப் புரட்சிகரமான சாதனைகளைப் படைத்துள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
‘திராவிட இயக்கத்தை வேரறுப்பேன் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்குப் பின்னரே, நான் ஒரு முடிவை எடுத்தேன். திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், தளபதி மு.க.ஸ்டாலினுடன் தோழமை கொள்ள வேண்டும் என்று விரும்பி, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தேன. ‘மறைந்த மூத்த தலைவர் அன்பில் தர்மலிங்கம் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்; என்னை ஒரு சகோதரனாக, உயிராகப் பாவித்தார்.
இந்தக் கல்கண்டார்கோட்டை பகுதி எப்போதும் திராவிட இயக்கத்தின் கோட்டையாகவும், இயக்கத்தை ஆதரிக்கும் தளமாகவும் இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் எனத் தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கப் போராடியவன் என்கிற உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன்.
சாதி, மதம், கட்சி எனப் பாராமல், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் தம்பியாக, முதலமைச்சர் தளபதியின் தோழனாகத் தமிழ்நாட்டிற்குச் செய்து வரும் மக்கள் சேவை தொடர வேண்டும். அதற்கு, அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், திறமையான அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திராவிட இயக்கம் காக்கப்படட்டும் எனப் பேசினார். இந்தக் கூட்டத்தில் மதிமுக டாக்டர் ரொகையா, திமுக முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டார் திராளாக கலந்து கொண்டனர்.

