கொல்கத்தா, ஏப்.5- வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றால் அந்தப் பட்டியலை பயன்படுத்தி வெற்றிபெற்ற பிரதமர் மோடி முதலில் பதவி விலக வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மம்தா கூறினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வரும் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் தெற்கு தினாஜ்பூர் மற்றும் ஹரிராம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் முதலமைச்சர் மம்தா 3.4.2026 அன்று பேசியதாவது:
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அதே வாக்காளர் பட்டியலை சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்த மறுப்பது ஏன்?வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்கள் இடம்பெற்றிருந்தால் கடந்த காலங்களில் பிரதமர் மோடியும் அவர்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் வெற்றி பெற்றார். ஊடுருவல்காரர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்திதானே வெற்றி பெற்றார். எனவே அவர்தான் முதலில் பதவி விலக வேண்டும்.
மேற்கு வங்கத்துக்குள் வெளியாட்கள் நுழைவதற்கு வசதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. மத்திய காவல் படை வாகனங்களைப் பயன்படுத்திப் பணம் கொண்டு வரப்படுகிறது.
இது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை நான் வெளியிடுவேன். மேற்கு வங்கத்துக்கு ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் வருகை, தேர்தல் ரீதியாக பா.ஜ.க.வுக்கு பலன் அளிக்காது. மாறாக, தேர்தல் காலத்தில் அவர் இங்கு நீண்ட நாட்கள் தங்கியிருப்பது, அக்கட்சியின் வாக்கு சதவீதத்தைக் குறைப்பதற்குத்தான் வழிவகுக்கும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் தொடர்பாக மால்டாவில் 1.4.2026 அன்று நீதித்துறை அதிகாரிகள் பல மணி நேரம் முற்றுகையிடப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஏஅய்எம்அய்எம் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகிய அமைப்புகளே காரணம்.
காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இந்த சம்பவத்தை தூண்டிவிட்டன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க.வினர் அந்த முக்கிய குற்றவாளியை ஏஅய்எம்அய்எம் கட்சியிடமிருந்து கடன் வாங்கி இங்கு அழைத்து வந்துள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் மம்தா பேசினார்.
முதலில் பதவி விலக வேண்டியவர் பிரதமர் மோடி தான்! கூறுகிறார் மம்தா
Leave a Comment

