காஜியாபாத், மார்ச் 13 உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத் நகரைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்கிற இளைஞர், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக கோமாவில் நினைவின்றி இருக்கிறார். இவரை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனுத் தாக்கல் செய்திருந்ததையடுத்து நாட்டில் முதல்முறையாக உயிர் நீக்க சிகிச்சைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.
ஹரிஷ் ராணா என்கிற உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்து வந்தார். 2013 ஆம் ஆண்டில் தான் தங்கி இருந்த விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஹரிஷ் ராணாவின் உடல் நிலையை மேம்படுத்த, பல்வேறு சிகிச்சைகள் அவ்வப்போது வழங்கப்பட்டுள்ளது. மகன் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்று நம்பிக்கையுடன் ஹரிஷ் ராணாவின் பெற்றோர்கள் கடந்த 13 ஆண்டுகளாக அவரை பார்த்துக்கொண்டனர். வீட்டிலேயே வைத்து அவருக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்த அவர்களுக்கு இப்போது வயதாகிவிட்டது. தங்களால் இனி தங்களது மகனை பார்த்துக் கொள்ள இயலவில்லை என்று கூறி ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மருத்துவர்கள் சரியான வழிமுறைகளை பின்பற்றி அவருக்கு உயிர் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.
