புதுடில்லி, மார்ச் 4– தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட எட்டு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட மூன்று யூனியன் பிரதேசங்களில், எஸ்.அய்.ஆர்., எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து, 3.13 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில், கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், எஸ்.அய்.ஆர்., பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வீடு, வீடாகச் சென்று ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு நடத்திய நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து, 65 லட்சம் பேர் நீக்கப் பட்டனர்.
சட்டமன்றத் தேர்தல்
இரண்டாம் கட்டமாக, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய யூனி யன் பிரதேசங்களில், எஸ்.அய்.ஆர். பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் மட்டும், சிறப்பு திருத்தம் என்ற பெயரில் திருத்தப் பணி நடந்தது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.
இரண்டாம் கட்டமாக, எஸ்.அய்.ஆர். பணி நடந்த மாநிலங்களில், உ.பி.,யை தவிர, தமிழ்நாடு உட்பட எட்டு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட மூன்று யூனியன் பிரதேசங்களில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி விட்டது.
எஸ்.அய்.ஆர்., பணிக்கு முன், இந்த எட்டு மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில், மொத்தம், 36 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், இந்த எண்ணிக்கை, 32.87 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, 3.13 கோடி பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர்.
திட்டம்
இரண்டு இடங்களில் பதிவு செய்தது, உயிரிழப்பு, வேறு இடங்களுக்கு மாறியது போன்ற காரணங்களால் இந்தப் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீ க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக, தமிழ்நாட்டில், 74 லட்சம்; மேற்கு வங்கத்தில் 63 லட்சம் பேர் நீக்கப் பட்டனர்.
மீதமுள்ள 40 கோடி வாக்காளர்களை கொண்ட, 17 மாநிலங்கள் மற்றும் அய்ந்து யூனியன் பிரதேசங்களில், விரைவில், எஸ்.அய்.ஆர். பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
