பாட்னா, செப்.1 நாட்டில் “வாக்குத் திருட்டு” என்பது முக்கிய விவகாரமாக உரு வெடுத்துள்ளது. பாஜக ஆதரவு “கோதி மீடியா” ஊடகங்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு நாளும் பாஜக – தேர்தல் ஆணைய கள்ளக் கூட்டணியின் வாக்கு திருட்டுச் சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இதனால் பாஜக – தேர்தல் ஆணையம் கலக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், “வாக்குத் திருடர் யார்?” என்ற கேள்விகளுடன் வடமாநில மக்களிடம், உள்ளூர் ஊடகங்கள் கருத்து கேட்கும் வேலையைத் தொடங்கியுள்ளன. “அல்ட்ரா சஸ்மா (ultra chasma)” உள்ளிட்ட ஹிந்தி உள்ளூர் ஊடகங்கள் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் “வாக்குத் திருடர் யார்?” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றன.
அல்ட்ரா சஸ்மா செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்கு வடமாநில மக்கள், “தேநீர் விற்பவர், சுற்றுலா செல்பவர், பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராதவர்” என இரட்டை அர்த்தத்தில் பதில் அளிக்கின்றனர்.
செய்தியாளர்கள் ‘புரியவில்லை’ என்று கூறும் போது மக்கள், ‘‘எங்களுக்கு மிரட்டல் வரும். கைது செய்யப்படுவோம். அதனால் கூற முடியாது” என்று கூறுகின்றனர். ஆனால் சிலர், “வாக்குத் திருடன் பிரதமர் மோடி தான்” என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் பாஜக – தேர்தல் ஆணையம் பதற்றத்தில் உறைந்துள்ளன.