ராஞ்சி, ஆக.7 கடந்த 2018-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகழைக் கெடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை ராகுல் கூறியதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சாய்பாசா நகரில் உள்ள நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பிரதாப் குமார் என்பவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால், ராகுலுக்கு நீதிமன்றம் பிணையில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார். கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்றம், சாய்பாசா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதன்படி, சாய்பாசா நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார். அப்போது ராகுலுக்கு பினை வழங்கப்பட்டது.