புத்தக அறிமுக விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சியுரை

viduthalai
17 Min Read

ஆசிரியர் அவர்களே, ஒவ்வொரு நாளும், ஏதோ ஒரு கருத்தை நீங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்;
அந்த ‘எனர்ஜி’ உங்களுக்கு எங்கே இருந்து வருகிறது என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை!
உங்களைப் பார்க்கும்போது, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு,
இன்னும் உழைக்கவேண்டும்; இந்த சமுதாயத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கின்ற எண்ணம் வருகிறது!

சென்னை, ஜூலை 5- ‘‘அய்யா ஆசிரியர் அவர்களே, 92 அல்ல, 100 வயதைக் கடந்து நீங்கள் வாழ்ந்து, முற்போக்குக் கருத்துகளைப் பரப்பவேண்டும். உங்களை நாங்கள் ஊக்கப்படுத்துகின்றோம் என்று சொன்னால், நீங்கள் ஓரிடத்தில் சும்மா இருக்க மாட்டீர்கள்? நாங்கள், உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கி றோம்; ‘விடுதலை’யைப் பார்க்கின்றோம்; சமூக வலை தளங்க ளிலும் பார்க்கின்றோம். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாள், ஏதோ ஒரு கருத்தை நீங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். அந்த ‘எனர்ஜி’ உங்களுக்கு எங்கே இருந்து வருகிறது என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால், உங்களைப் பார்க்கும்போது, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு, இன்னும் உழைக்கவேண்டும்; இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் என்கின்ற எண்ணம் வருகிறது என்றார் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’

கடந்த 29.6.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய புத்தகத்தின் மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பான ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’  என்ற நூலின்  அறிமுக விழாவில் நூலாசிரியர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நமக்கு இன்றைக்கு பாடம் எடுக்க வருகை தந்திருக்கின்ற ஆசிரியர்!

‘‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு’’ (குறள் 552) என்கின்ற வள்ளுவனுடைய வாக்கிற்கு, நமது நெஞ்சமெலாம் நிறைந்திருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களு டைய விளக்கவுரை என்பது, ஆட்சிக் கோல் ஏந்தி இருப்பவர்கள், தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டி, பொருளைப் பறிப்பது என்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது என்கின்ற அந்த விளக்கவுரையோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ புத்தகம் மக்கள் பதிப்பு, மின்னூல் பதிப்பு அறிமுக விழாவினை – திராவிட மாணவர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியும் இணைந்து நடத்துகின்ற இவ்விழாவிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும், இப்புத்தகம் குறித்து, பல்வேறு விதத்திலும் நமக்கு இன்றைக்கு பாடம் எடுக்க வருகை தந்திருக்கின்ற ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் என்னு டைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெறுகின்ற இந்த நிகழ்வு என்பது தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் இருக்கின்ற இந்த இடம், நமக்கான தலைமைக் கழகமே இதுதான்.

இவ்விழா நடைபெறுகின்ற மன்றம், நடிகவேள் அய்யா எம்.ஆர்.இராதா அவர்களுடைய பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற மன்றமாகும்.

‘‘தந்தை பெரியாருடைய செல்லப்பிள்ளை அன்பில் தர்மலிங்கம்’’

எனக்கான மிகப்பெரிய ஒரு பெருமையாக நம்மு டைய ஆசிரியர் அய்யா அவர்கள் அடிக்கடி, ‘‘தந்தை பெரியாருடைய செல்லப்பிள்ளை அன்பில் தர்மலிங்கம்’’ என்று சொல்வார்.

அந்த அன்பில் தர்மலிங்கம் அவர்கள், நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, அன்பில் என்கின்ற அந்த சிறிய கிராமத்தில், அவரை வைத்து ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியிருக்கின்றார் என்கின்ற செய்திகளை நாங்கள் படித்திருக்கின்றோம்.

இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த நிகழ்வுகளையெல்லாம் ஒன்றிணைத்து, இன்றைக்கு ஒரே இடத்தில், வரவேண்டிய இடத்தில் நாங்கள் வந்து நிற்கின்றோம் என்கின்ற உணர்வோடுதான், உங்கள் முன்பு நான் நின்றுகொண்டிருக்கின்றேன்.

வருகை தந்திருக்கின்ற இளைய சமுதாயத்தினர், மாணவச் செல்வங்கள் – எதற்காக இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது? என்பதைச் சிந்திக்கவேண்டும்.

எதற்காக இதுபோன்ற ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்?

மனிதர்களைப் பாகுபடுத்தி
பார்க்கக் கூடாது!

மிகவும் எளிமையாகச் சொல்லவேண்டுமானால், உடலில், தலை, தோள், தொடை, கால் என்று இவற்றை உடற்பாகங்களாகப் பார்க்கவேண்டுமே தவிர, அவற்றை குறியீடாக்கி மனிதர்களைப் பாகுபடுத்தி பார்க்கக் கூடாது என்கின்ற எண்ணத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு புத்தகம்தான் இந்தப் புத்தகம்.

இன்றைக்கு இருக்கின்ற இளைஞர் சமுதாயத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

ஒன்று, கருத்தியல் ரீதியாக நிறையப் படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

இரண்டு, அனுபவ ரீதியாக, பல்வேறு கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளவேண்டும்; அர்த்தமுள்ளதாக அவை இருக்கவேண்டும் என்கின்ற விதத்திலும் பார்க்கிறார்கள்.

சொல்லவேண்டிய செய்தியை, வரலாற்றுச் சான்றுக ளோடு எடுத்துச் சொல்லுகின்ற விதத்தை, காது கொடுத்துக் கேட்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

அந்தந்தப் பகுதியைச் சார்ந்த மாணவச் செல்வங்கள், இளைய சமுதாயம், அங்கே இருக்கின்ற ஓர் இளைஞன் மூலமாக, ‘ராப்’ பாடல் பாடினால், அது அவர்களுக்குப் பிடிக்கிறது.

முற்போக்குத்தனமான கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் இளைய சமுதாயம் அமைந்திடவேண்டும்!

ஆனால், ஏதோ ஒரு விதத்தில், அது எப்படி சொல்லப்படுவதாக இருந்தாலும் சரி, அதிலிருக்கின்ற முற்போக்குத்தனமான கருத்துகள் எதுவாக இருந்தா லும், அது எந்தவிதத்தில் வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் இளைய சமுதாயம் அமைந்திடவேண்டும் என்பதற்காகத்தான், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதிலும் இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பல்வேறு விதத்தில் இளைஞர் சமுதாயத்தினருக்கு, சந்தோசமாக வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கவேண்டும்; நண்பர்களோடு சுற்றவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கலாம்.

ஆனால், அவற்றையெல்லாம் கடந்து, இரண்டு இயக்கங்களுடைய ஓர் அழைப்பை ஏற்று, இவ்வளவு பேர் வந்திருக்கின்றீர்கள்; முதலில், இளைய சமுதாயத்தி னருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தப் புத்தகத்தினுடைய வெளியீட்டு விழாவில், தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் சொன்னதை இங்கே சொல்கிறேன். ‘‘இன்றைக்கு இருக்கின்ற காலச் சூழ்நிலையில், இதுபோன்ற புத்தகத்தை எழுதுவதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்’’ என்று சொன்னார்.

அந்தத் துணிச்சலை எனக்குக் கொடுத்ததே, என்னு டைய அரசியல் ஆசான் மாண்புமிகு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள்தான்.

அந்தத் துணிச்சலோடு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றோம். இன்றைக்கு இங்கே எல்லோரும் சொன்னதுபோன்று, ஏதோ ஒரு விதத்தில், ஆங்காங்கே இந்தப் புத்தகத்தைப்பற்றி பேசப்படுகிறது; இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துகளைப்பற்றி பேசப்படுகிறது.

யாருடா அந்தப் பையன்?

ஒன்றியத்தில் இருக்கக்கூடியவர்கள் கேட்பார்கள், என்ன கேட்பார்கள்; ‘‘என்னடா இது, ‘மத யானை’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறானே, யாருடா அந்தப் பையன்?’’ என்று கேட்பான் அல்லவா!

அப்பொழுது, யாருடா, அந்தப் பையன்? என்ற கேள்விக்குப் பதிலாக, ஒவ்வொருவரும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியாக மாறி, ‘‘நான்தாண்டா, அந்தப் பையன்’’ என்று நீங்கள் எல்லாம் சொல்லவேண்டும்.

இந்தப் புத்தகம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய புத்தகமாக இருந்தாலும், இது உங்களுடைய புத்தகம். உங்களுடைய கல்வி சார்ந்திருக்கின்ற புத்தகம். உன்னுடைய தம்பியும், தங்கச்சியும் படிக்கிறார்களே, அந்தக் கல்வி உரிமை பறிக்கப்படுகிறதே, அதற்காக எழுதப்பட்ட புத்தகம்.

‘‘நான்தாண்டா அந்தப் பையன்!’’

ஆகவே, இந்தப் புத்தகத்தை எழுதியது யாருடா இந்தப் பையன்? என்றால், எல்லோரும் சொல்லுங்கள், ‘‘நான்தாண்டா அந்தப் பையன்’’ என்று தைரியமாக நீங்கள் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான், இதை நான் சொல்கிறேன்.

பல நேரங்களில், இந்த அரங்கத்திற்குப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கின்றேன்.

நம்முடைய மாண்புமிகு துணை முதலமைச்சர், ஒரு புத்தகத்தை வெளியிடுகின்ற நிகழ்ச்சியில், நான் ஒரு பார்வையாளனாக கீழே அமர்ந்து பார்த்திருக்கின்றேன்.

பல நேரங்களில், திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக  இந்த அரங்கத்திற்கு வந்திருக்கின்றேன்.

என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு பெருமை-  ஒரு பேறு!

ஆனால், இம்முறை இங்கே வந்திருப்பது, ‘மத யானை’ புத்தகத்தைப்பற்றி, எங்களுடைய தலைமை நிலையத்தில், எங்களுடைய அய்யாவினுடைய உரை யைக் கேட்பதற்காக வந்திருக்கின்றேன் என்பதை, என்னுடைய வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு பெருமையாக, ஒரு பேறாக நான் கருதுகின்றேன்.

92 அல்ல, 100 வயதைக் கடந்து
நீங்கள் வாழவேண்டும்!

இந்த நேரம் என்பது, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா காலகட்டத்தில், இதுபோன்ற புத்தகத்தை எழுதுகின்ற அளவிற்கு நமக்குத் தேவை இன்னும் இருக்கின்றது என்று சொன்னால், ‘‘அய்யா, 92 அல்ல, 100 வயதைக் கடந்து நீங்கள் வாழ்ந்து, இந்தக் கருத்துகளைப் பரப்பவேண்டும், அய்யா’’ என்பதற்காகத்தான்.

உங்களை நாங்கள் ஊக்கப்படுத்துகின்றோம் என்று சொன்னால், நீங்கள் ஓரிடத்தில் சும்மா இருக்க மாட்டீர்கள்? நாங்கள், உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்; ‘விடுதலை’யைப் பார்க்கின்றோம்; சமூக வலைதளங்களிலும் பார்க்கின்றோம்.

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாள், ஏதோ ஒரு கருத்தை நீங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.

அந்த ‘எனர்ஜி’ உங்களுக்கு எங்கே இருந்து வருகிறது என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

உங்களைப் பார்க்கும்போது,
எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு…

ஆனால், உங்களைப் பார்க்கும்போது, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு, இன்னும் உழைக்கவேண்டும்; இந்த சமுதாயத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கின்ற எண்ணம் எங்களுக்கு வருகிறது.

ஆக, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டை கடந்த காலகட்டத்தில், இந்தப் புத்தக அறிமுக விழா நடைபெறு கிறது என்று சொல்லும்போது, குறிப்பாக சுயமரியாதை இயக்கம் நமக்குத் தந்த தலைவர்கள்தான், அறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.

புரவலர் அன்பில் தர்மலிங்கம்

தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இருந்தாலும், சுயமரியாதை இயக்கமாக இருந்தாலும், நீதிக்கட்சியாக இருந்தாலும், திராவிடர் கழகமாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், இதில் எல்லா இயக்கத்திலும் பணியாற்றியவர்தான் அய்யா புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்கள்.

அவருடைய பேரப் பிள்ளையாகத்தான், என்னுடைய கடமையாகத்தான் இதுபோன்ற புத்தகத்தை எழுதி, இன்றைக்கு இந்த மேடையை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகை தந்திருக்கின்ற இளைஞர் சமுதாயமே, ஒன்றை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. அரசு, எப்படியெல்லாம் நம்மை வஞ்சிக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பைப் பயன்படுத்தியவன் தமிழன்!

மிகமிக பழைமையான மொழிக்காரர்கள் நாமெல்லாம். தமிழன் என்கின்ற இனம், தனித்துவமான இனம். மிகவும் பழைமையான மொழிக்குச் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல, அண்மையில் அறிவியல் கண்டுபிடிப்பு சொல்லிற்று – 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பைப் பயன்படுத்தியவன் தமிழன் என்ற பெருமையை நாம் பெற்றிருக்கின்றோம் என்பதை நீங்கள் எல்லாம் மறந்துவிடக் கூடாது.

நம்மைப் பொறுத்தவரையில், நான் அடிக்கடி சொல்வதுதான்-

Tamils is for Identity; English for Opportunity- தமிழ் என்பது அடையாளத்திற்கானது; ஆங்கிலம் என்பது வாய்ப்புக்கானது.

இதை நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால், நம்முடைய அடையாளத்தை மறைக்கின்ற விதமாக ஒன்றிய பா.ஜ.க. அர இன்றைக்கு என்ன வெல்லாம் செய்கிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அது எங்கே இருந்து ஆரம்பிக்கும் என்றால், இதுபோன்று என்.இ.பி. என்ற இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய அறிவை மழுங்கச் செய்து, அவர்கள் என்னென்ன கருத்தை சொல்கிறார்களோ, அதை ஏற்றுக்கொண்டு, அது சரிதான் என்று நம்மையே பேச வைத்துவிடும்.

நம்முடைய விரல்களாலே, நம்முடைய கண்களைக் குத்திக் கொள்கின்ற நிலை!

கிட்டத்தட்ட நம்முடைய விரல்களாலே, நம்முடைய கண்களைக் குத்திக் கொள்கின்ற பணியைச் செய்வதுதான் என்.இ.பி.2020. அதைத் தெளிவுபடுத்தவேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம்.

குறிப்பாகப் பார்த்தீர்களேயானால், தமிழர்களுடைய அறிவு என்பது கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரைக்கும், தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்ற வரைக்கும் இருந்தது. ஆனால், அதன் பிறகு அந்த சங்கங்கள் மருவ, மருவ, நம்முடைய கல்வி அறிவு நமக்குக் கிடைக்காமலே போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அதனை மூடிவிட்டார்கள்.

நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும்,
தந்தை பெரியாரும் தேவைப்பட்டனர்!

மூடியிருந்த அந்தக் கல்வி அறிவு நமக்குக் கிடைப்பதற்கு, திறப்பதற்கு ஏறத்தாழ 17 நூற்றாண்டுகள்  ஆயின. அதற்கு, நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், தந்தை பெரியார் போன்றவர்களும் தேவைப்பட்டார்கள்.

அவர்கள் எல்லாம் வராமலிருந்திருந்தால், இந்த இயக்கமே  பிறந்திருக்காவிட்டால், இப்படி ஓர் அரங்கத்தில், இப்படி சமமாக நாமெல்லாம் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு தெளிவை கல்வி அறிவின் மூலமாகத்தான் கொடுக்க முடியும் என்று நினைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, விஞ்ஞானம் சார்ந்தும் சரி; தன்மானம் சார்ந்தும் சரி; ஒழுக்கம் சார்ந்தும் சரி. இதையெல்லாம் எது சொல்லித் தருகிறதோ, அதுதான் கல்வி. அதைச் சொல்லித் தராதது கல்வி அறிவாக இருக்க முடியாது என்று தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

17 நூற்றாண்டுகள் கடந்துதான்
நமக்குக் கல்வி அறிவு கிடைத்தது!

ஆக, அதை உணர்ந்து, 17 நூற்றாண்டுகள் கடந்து தான் நமக்குக் கல்வி அறிவு கிடைத்தது என்று சொன்னேன் அல்லவா, மிக எளிதாகவா அது நமக்குக் கிடைத்தது. கதவு திறந்தது, நம்முடைய பிள்ளைகள் எல்லாம் படிக்கச் செல்லலாம் என்கின்றபோது, ஹிந்தித் திணிப்பு என்று ஒன்று வந்தது.

அதற்குப் பிறகு, சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான், நீ மருத்துவராக ஆக முடியும் என்ற நிலை இருந்தது.

அதற்குப் பிறகு குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்று வந்தது.

எல்லாவற்றையும் தந்தை பெரியார் அவர்கள், கையில் வைத்திருக்கும் கைத்தடியால், அடித்து அடித்து விரட்டினார். அவர் அப்படி செய்யவில்லை என்று சொன்னால், நமக்கு இந்த அறிவு கிடைத்திருக்காது.

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி மிகத் தெளிவாக உணர்வதற்கு மதத்தையும், அறிவையும் தனியாகப் பிரித்து வைத்திடுங்கள்.

1938 ஆம் ஆண்டே சொன்னார்
தந்தை பெரியார்

‘‘மதத்தைப் புகுத்தி, அறிவைத் தடுத்துவிட்டால், சுதந்திர ஞானம் வராது’’ என்பதை 1938 ஆம் ஆண்டே சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

ஆக, ஒரு சமுதாயம் என்பது, மதத்தைக் கையிலெ டுத்தால், அந்தச் சமுதாயம் அழிந்துவிடும்.

அறிவியலையும், அறிவையும் ஒரு சமுதாயம் கையிலெடுத்தது என்று சொன்னால், அந்த சமுதாயம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

அறிவியல் சார்ந்து நாம் சிந்திக்கவேண்டும் என்ப தற்காக எழுதப்பட்டதுதான் இதுபோன்ற புத்தகங்கள்.

ஆர்டிபிசியல் இன்ட்டலிஜென்ஸ்!

என்.சி.இ.ஆர்.டி.யைப் பொறுத்தவரையில், இராமாய ணத்தையும், மகாபாரதத்தையும் எப்படியெல்லாம் சொல்லலாம்; அதன்மூலமாக நீதிக்கதைகளை எப்படியெல்லாம் சொல்லலாம் என்று அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, நம்முடைய மாநிலம், ஆர்டிபிசியல் இன்ட்டலிஜென்சையும், ரோபோட்டிக்கையும் எப்படி விளக்கிச் சொல்லலாம் என்று நாம் நினைக்கிறோம்.

நாம் இதைச் செய்யக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரையில், அறிவியல் சார்ந்து இருக்கவேண்டும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து, நல்ல தேசியக் கல்வி கொள்கையை உருவாக்கினால், தவறு இல்லை.

தேசியக் கல்விக் கொள்கை 2020 அய் உருவாக்கியது யார்?

ஆனால், இப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020 அய் உருவாக்கியது யார்?

ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், அதனை சார்ந்து இருக்கின்ற 11 அமைப்புகளும்தான். இதைப்பற்றி ஆசிரியர் அய்யா அவர்கள் பேசுவார்.

மேற்சொன்ன அமைப்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு பிற்போக்குத்தனமான ஒரு ப்ராடக்ட்டைக் கொடுக்கின்றார்கள் என்றால், அதை நம்மால் எப்படி வாங்க முடியும்?

அதைச் சொல்லக்கூடியதாக ஒரு புத்தகத்தை எழுதவேண்டும் என்கின்ற ஓர் ஆசையின் காரணமாகத்தான், இந்தப் புத்தகத்தை நாங்கள் எழுதியிருக்கின்றோம்.

வாய்ப்பு என்பது மனிதனுக்கு எப்போதாவது ஒருமுறைதான் கிடைக்கும். 8 கோடி தமிழர்களில், ஒரே ஒருத்தன்தான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக  இன்றைக்கு நான் இருக்கின்றேன்.

இந்தப் பொறுப்பு வந்த பிறகு, அந்தப் பொறுப்பை சொகுசாக நான் கழித்துவிட்டுப் போகலாம்.

குளிரூட்டிய அறையில் அமர்ந்துகொண்டு, கோப்புகளில் கையெழுத்துப் போட்டால், என்னை அமைச்சர் என்றுதான் சொல்லப்போகிறார்கள். எனக்கான மரியாதை, மாலைகள் எனக்கு வரத்தான் போகின்றன. எனக்கான புரோட்டோகால் இருக்கத்தான் போகிறது.

எப்போதெல்லாம் சட்டப்பேரவை கூடுகிறதோ, அப்போதெல்லாம் சட்டப்பேரவைக்குச் சென்று, பிறகு என்னுடைய மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.

கொள்கையிலிருந்து சிறிதும் விலகிவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்!

ஆனால், அதற்காக ஒரு திராவிட இயக்கம், ‘திராவிட மாடல்’ அரசு என்று சொல்கிறோம் அல்லவா! அதிலிருக்கின்ற ஒவ்வொரு அமைச்சர்களும், தங்கள் துறை சார்ந்து, அதனுடைய கருத்துகள் சார்ந்து, அதனு டைய பொருள் சார்ந்து, கொள்கையிலிருந்து சிறிதும் விலகிவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் அல்லவா – அதுதான் இதுபோன்ற புத்தகங்களை எழுத வைக்கின்றது; இதுபோன்ற சிந்தனைகள் எங்களுக்குத் தோன்றுகின்றன.

இதனைச் சொல்வதற்குக் காரணம், ஒவ்வொரு முறையும்,  தமிழ்நாட்டினுடய, நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லுகின்ற கருத்துகள் அரசியல் ரீதியாக அவர் பேசுகின்ற அந்தக் கருத்துகளையெல்லாம் நாம் பார்க்கின்றபோது, எப்படியெல்லாம் நாம் விழிப்பு ணர்வோடு இருக்கவேண்டும் என்பதை அவர் சொல்கி றார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியினுடைய அறிவு என்பது ஒவ்வொரு நாளும் அப்டேட் ஆகிறது. அதனால், நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்படிப் புதுப்பிக்காமல், அப்படியே நாம் நின்றுவிட்டோம் என்று சொன்னால், உலகம் எங்கேயோ போயிருக்கும்; நாம் இன்னும் கீழே போய்க்கொண்டே இருப்போம்.

அடுத்த நாட்டுடன் நாம் போட்டி போடவேண்டும்!

உலக அறிவோடு நாம் போட்டிப் போட்டுக்கொண்டே செல்லவேண்டும். அடுத்த மாநிலத்தைப்பற்றி நான் சொல்லவில்லை; அடுத்த நாட்டுடன் நாம் போட்டி போட்டால்தான், நம்முடைய பிள்ளைகளை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு வருவதற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால்தான், பல டெக்னாலஜியை  இன்றைக்கு நாங்கள் கொண்டு வருகிறோம்.

ஆக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் போட்டுத்தந்த பாதையில் நாம் பயணிப்பதால்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சொல்கிறார், ‘‘நீ எங்கள் மாநிலத்திற்குக் கொடுக்கவேண்டிய 2,152 கோடி ரூபாயை, நீ சொல்லுகின்ற கொள்கையை ஏற்றுக்கொண்டால், தருவேன் என்று சொன்னால், அதற்காக நீ 10 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுத்தாலும், எங்களுக்கு அந்த நிதி தேவையில்லை. அதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்வதற்குக் காரணம் அதுதான்.

நாம், இவ்வளவு உரக்க ஒரு புத்தகத்தை எழுதுகிறோம். பல நேரங்களில், பல கருத்துகளை நாம் எடுத்துச் சொல்லுகின்றோம் என்கிறபோது, இன்னமும் அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாமல், தங்களுடைய திணிப்பையேதான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்கிறபோது, அதனை எதிர்த்துப் பேசவேண்டிய மிகப்பெரிய கடமை யாருக்கு இருக்கிறது தெரியுமா?

இளைய சமுதாயமாகிய உங்களிடம்தான்…

மேடையில் இருக்கின்ற எங்களுக்கு அல்ல; எதிரே அமர்ந்திருக்கின்ற இளைய சமுதாயமாகிய உங்க ளிடம்தான் இருக்கின்றது. அதனை உள்வாங்கக்கூடிய ஒரு கூட்டமாக, இந்தக் கூட்டம் அமைந்திடவேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம்.

அந்த ஆசையின் விளைவாகத்தான், நம்முடைய அன்புச் சகோதரர் ராஜீவ்காந்தி அவர்கள், திராவிட மாணவர் கழக தம்பிகளோடு சேர்ந்து இன்றைக்கு இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்விற்கு ஏற்பாடு செய்தி ருக்கின்றார்.

ஆசிரியர் சொன்ன திருத்தங்களை உடனடியாகச் செய்தேன்!

‘மத யானை’ புத்தகத்தில் உள்ள சிறு சிறு திருத்தங்களை நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்னார். அதனால்தான், அவரை நாமெல்லாம் ‘‘ஆசிரியர், ஆசிரியர்’’ என்று சொல்கிறோம் – அவர் சொன்ன திருத்தங்களை சரி செய்து, இன்றைக்குப் புதிதாக ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, ‘‘அய்யா, நீங்கள் சொன்ன திருத்தங்களை நான் செய்திருக்கிறேன்’’ என்று ஒரு மாணவனாக இன்றைக்கு அவரிடம்  நான் சொன்னேன்.

சிவப்புக் கோடுகளும்,
பச்சைக் கோடுகளும்தான்!

இன்றைக்கு ஆசிரியர் அய்யா அவர்கள் என்னைப் பார்த்தவுடன், ‘‘நீங்கள் கொடுத்த புத்தகத்தை உடனே படித்து முடித்துவிட்டேன்; அந்தப் புத்தகத்தில் எங்கே பார்த்தாலும், சிவப்புக் கோடுகளும், பச்சைக் கோடுகளும்தான் இருக்கும்’’ என்று சொன்னார்.

ஆசிரியர் அய்யா அவர்கள், கிழித்தது வெறும் சிவப்புக் கோடுகள் மட்டுமல்ல, மொழிக்காக தங்களு டைய இன்னுயிரை நீத்தார்களே, அந்தச் சிவப்புக் கோடுகள்மூலமாக அவர்களை நான் பார்க்கின்றேன்.

அவர் கிழித்த பச்சைக் கோடுகள், நமக்கான உணர்வு களை, நம்முடைய தன்மானத்தைத் தூண்டுகின்ற விதமாக, படித்துக் கோடு போட்டிருக்கிறார். இங்கே வந்திருக்கின்ற தம்பிகள், ஒருமுறையாவது இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.

இதை அரசியல் சார்ந்து நாங்கள் சொல்லவில்லை. கண்மூடித்தனமாக ஒன்றிய அரசு கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்த்து நாங்கள் பேசவில்லை.

ஏறத்தாழ, பள்ளிக் கல்வித் துறை சார்ந்து மட்டும் எழுதப்பட்ட புத்தகம் இது. கல்லூரிப் பக்கமே இந்தப் புத்தகத்தில் போகவில்லை.

நான் என்னுடைய எல்லையைத்
தாண்டி விடக்கூடாது என்பதற்காக…

ஒரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, நான் என்னுடைய எல்லையைத் தாண்டி விடக்கூடாது என்பதற்காக, பள்ளி சார்ந்து மட்டுமே இந்த விழிப்பு ணர்வை எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

ஏறத்தாழ 39 வகையான சரத்துகளை, நமக்குத் தேவையில்லாததையெல்லாம் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதனால், மாணவச் செல்வங்கள் பாதிக்கப்படுகின்றனர்; பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர். என்னுடைய பெருமதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதையெல்லாம் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் சொன்னதையே, இப்போது உங்களுக்குச் சொல்கிறோம்!

நாங்கள் சொல்வதில் தவறு இருக்கின்றது என்றால், நீங்கள் எங்களைத் தாராளமாகக் கேட்கலாம். தந்தை பெரியார் சொன்னதையே இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். ‘‘நாங்கள் சொல்வதை அப்படியே நீங்கள் நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களுக்கென்று ஒரு பொது அறிவு இருக்கிறது அல்லவா – அதை வைத்து, ஆமாண்டா, அன்பில் மகேஸ் சொன்னது சரிதாண்டா’’ என்று உங்கள் மனதில் பட்டால் மட்டுமே அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அந்த வகையில், இந்தப் புத்தகம் 134 பக்கம் என்று சொன்னால், 2 மணிநேரத்தில் இதைப் படித்துவிடலாம்.

எங்கேயெல்லாம் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம். எப்படியெல்லாம் நம்மை வஞ்சிக்கின்றார்கள் என்பதையெல்லாம் நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும்.

நமக்கெல்லாம் பாதுகாப்பு அரண் நம்முடைய முதலமைச்சர்!

ஓர் அரணாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டையும், நம்முடைய பள்ளிக் கல்வித் துறையையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்.

அதில், எந்தவிதத்திலும் பிற்போக்குத்தனத்திற்கு இடமில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால், எங்களுக்கான ஒரு கலங்கரை விளக்கம் – எங்களுக்கான ஒரு   சாட்டிலைட் பெரியார் திடலில்தான் இருக்கிறது.

இந்தத் திடல், எங்கேயெல்லாம் எங்களைப் பார்க்கிறதோ, அது சார்ந்து எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டே இருக்கின்றோம். அது சார்ந்து எங்களை நாங்கள் திருத்திக் கொண்டே இருக்கின்றோம் என்பதைச் சொல்வதற்காகத்தான், இன்றைக்கு இதுபோன்ற நிகழ்வில் நாம் பங்கு பெற்றிருக்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றி!

அந்த வகையில், இங்கே வருகை தந்துள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், இளைய சமுதாயத்திற்கும், பல்வேறு இயக்கத்தைச் சார்ந்திருக்கின்ற நம்முடைய நிர்வாகிப் பெருமக்களுக்கும், குறிப்பாக, இந்த மாலைப் பொழுதை, ஒரு பயனுள்ள மாலைப் பொழுதாக மாற்ற இங்கே வருகை தந்துள்ள நம்முடைய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியைத் தெரிவித்து, என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

– இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *